“இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர்” - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

381

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம் பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜி.ஆர். என்.டி.ஆர்., ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இவர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.

தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசு வேண்டும். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா. உன்னை ஒன்று கேட்பேன். லவ் பேர்ட்ஸ். தொட்டால் பூ மலரும். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜா தேவி அம்மையார். 

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து இத்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும். அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

DMK MK STALIN sarojadevi
இதையும் படியுங்கள்
Subscribe