
தமிழ் திரையுலகில் முக்கிய ஆளுமைகளாக திகழும் இசையமைப்பாளர் இளையராஜா(82) மற்றும் இயக்குநர் மணிரத்னம்(69) இன்று பிறந்தநாள் காண்கின்றனர். இதனையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இளையராஜாவுக்கும் மணிரத்னத்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் தனித்தனியே பதிவிட்டுள்ள அவர், இளையராஜா வாழ்த்து பதிவில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் வாழ்த்து பதிவில், “தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் மணிரத்னத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இளையராஜா இன்றைய தினம் அல்லாது நாளைய தினமான ஜூன் 3ஆம் தேதிதான்(03.06.1943) பிறந்தார். ஆனால் அதே நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தார் என்பதால் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்பு, அதாவது இன்று(02.06.2025) கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.