![minister udhayanidhi helped to actors assoociation for nadigar sangam new building](http://image.nakkheeran.in/cdn/farfuture/yUjyGNluyU4fkw4vJYzX3UVJmgQZfg6OI_INEGuUugQ/1707995494/sites/default/files/inline-images/239_12.jpg)
தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி உதவியுள்ளார். நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
இதற்காக அமைச்சர் உதயநிதிக்கு சங்க பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் முடிக்க விருப்பப்பட்டு முன்வந்து உதவிய ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, நண்பராக, அமைச்சராக உனது பங்களிப்பிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.