Skip to main content

"நாளிதழில் வந்த செய்தியால் நேரடியாக என் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்" - சுவாரஸ்யம் பகிரும் தியாகராஜன்

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

"MGR who came directly to my house by the news in the newspaper" - Thiagarajan sharing the incident

 

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்ற மூன்று துறைகளில் பயணித்தவர் 'தியாகராஜன்'. 80-களில் இவர் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தன. இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்களுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு...

 

"என்னை பார்த்தவுடன் நீங்கள் வலுவான உடல்கட்டமைப்புடன் இருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். நான் அப்படி இருக்க காரணமே பாக்ஸிங் தான். பாக்ஸிங்கில் காலையில் எழுந்து இரண்டுமணி நேரம் ஓட வேண்டும். ஸ்கிப்பிங், டயட் போன்ற கண்டிப்பான வழிமுறைகள் இருந்தன. நான் பாக்ஸிங் பயிற்சியில் இருந்த போது 'அலைகள் ஓய்வதில்லை' படம் பெரிய வெற்றிபெற்றது. அந்த வெற்றியை வைத்து என்னை ஒரு மேடையில் பாக்ஸிங் பண்ண சொல்லி போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இந்த செய்தி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தெரிந்துவிட்டது. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எல்லாருக்கும் கேடயம் வழங்கி பேசிய எம்.ஜி.ஆர், " தியாகராஜன், நீங்கள் பாக்சர் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து மேடையில் பாக்ஸிங் செய்யவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். அந்த மேடையில் சண்டையிடும் போது உங்களுக்கு அடிபட்டு விட்டால் உங்களை நம்பி பணம் முதலீடு செய்துள்ள நிறைய தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்கள். அதனால் நீங்கள் இனிமே பாக்ஸிங் பண்ண கூடாது, இது என் அன்பு கட்டளை" என்று சொன்னார்.

 

அன்று முதல் பாக்ஸிங் பண்ணுவதை விட்டுவிட்டேன். அதன் பிறகு ஒரு படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டு விட்டது. நாளிதழ்களில் 'தியாகராஜனுக்கு விபத்து' என்ற தலைப்புடன் எழுதியிருந்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. முதலமைச்சர் உங்களை பார்க்க வருகிறார் என்று. நேராக வீட்டுக்கே வந்துவிட்டார். வந்து 'என்ன பாக்சிங்லயா...இல்ல சார் ஷூட்டிங்ல' என்று சொன்னேன். தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது அவரை சந்திப்பேன். ரொம்ப அன்போடு கேட்பார், எனக்கு ஒன்னும் வேண்டாம் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்வேன். பிறகு 'பூவுக்குள் பூகம்பம்' என்ற படத்தை இயக்கினேன். ஆர்மி கதைக்களத்தை கொண்டு உருவான முதல் இந்திய திரைப்படம் அதுதான். அந்த படத்தை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு போட்டு காண்பித்தேன், படம் பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி விட்டார். இந்த படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா ஒன்று செய்து அதனை நீங்கள் வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்துவிட்டார். நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் எம்.ஜி.ஆர் நிறைய செண்டிமெண்ட் பார்ப்பார். படத்திற்கு தலைப்பு எப்படி வைக்கவேண்டும், பத்து எழுத்தில் வைக்கவேண்டும் போன்ற விஷயங்களை என்னிடம் பகிர்ந்துள்ளார். ஒரு ஆடியோ வெளியீட்டிற்கெல்லாம் முதலமைச்சர் வருவாரா என்று பல பேர் அந்த நேரத்தில் கிண்டலடித்தனர். அவர் அந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தார். அதன் பிறகு தான் பாடல் வெளியீட்டு விழா வைக்கணும் என்ற ஃபார்முலா தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தனர்.  

 

சிவாஜியுடன் இருந்த அனுபவங்களை பற்றி கூறுகையில், "நான் பார்த்து வியந்த பிரம்மாண்டமான நடிகர் சிவாஜி சார். ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோவான வாகினி ஸ்டுடியோவில் மொத்தம் பதினேழு தளம் இருக்கும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு படப்பிடிப்பு நடக்கும். அப்போது ஒரு செட்டில் காரில் இருந்து சிவாஜி சார் கையில் சிகரெட் பிடிச்சிக்கிட்டு இறங்கி ஸ்டைலாக நடந்து வந்தார். அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். நாகிரெட்டி சாரை வழக்கமாக நான் சந்திப்பது உண்டு. எனக்கு ஏற்கனவே நடிப்பு வராது என்னை கூப்பிட்டு போய் அவருடன் சேர்ந்து நடிப்பதா என கூறி வர மறுத்துவிட்டேன். அவர் அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்து இந்த கதாபாத்திரம் இந்த தம்பி நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி தான் என்னை படக்குழு அணுகினார்கள். அதன் பிறகு என்னை வரசொல்லிருந்தார், அப்பவும் அவரை பார்க்கும் போது ஒரு பெரிய நடிகருடன் உக்காந்து இருக்கிறோம் என்ற உணர்வு. எனக்கு நடிப்பெல்லாம் வராது என்றேன். உடனே நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நம்ம நடிக்கிறோம் என்று சொன்னார். பின்பு என்னுடன் இணைந்து நடிக்கும் போது நெருங்கி பழகி விட்டார். அதன் பிறகு என் மேல் அவருக்கு தனி பிரியம் உண்டு. அப்போது ஆப்ரிக்கன் நாட்டிற்கெல்லாம் அதிகம் பயணம் மேற்கொள்வேன். பிஸ்னஸ் டீலிங்கிற்காக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயணிப்பேன். அப்போது ஆப்ரிக்கன் ஸ்டைலில் பெரிய கைசெயின், கழுத்தில் பெரிய செயின் அணிந்திருப்பேன். என்னை பார்த்தாலே 'டேய்...நகைக்கட இங்க வாடா...' என்று தான் அழைப்பார். அவர் அழைத்ததினாலோ என்னவோ தெரிவில்லை இங்க ஒரு நகைக்கடை ஆரம்பித்து விட்டேன்" என்று கூறினார்.   

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.