Skip to main content

எம்.ஜி.ஆருக்கும் ‘நோ’ வைரமுத்துவுக்கும் ‘நோ’!  பழைய ரீல் #2  

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
rdx palaya reel



எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. சினிமா வரலாற்றில் வெற்றிச் சரித்திரத்தை ஏற்படுத்திய இந்த சித்திரம், ‘இதேபோல் ஒரு வெற்றிக் காவியத்தைத் தர வேண்டும்’ என்கிற எண்ணத்தை எம்.ஜி.ஆருக்குள் ஏற்படுத்தியது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கற்பனை கலந்த வரலாற்றுப் புதினம் தமிழ்ப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் தாக்கத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தக் கதையை படமாக்கிடும் உரிமையையும் முறைப்படி பெற்றார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கவிருப்பதாக அறிவிப்பும், விளம்பரங்களும் வெளியானது.

 

 


‘பொன்னியின் செல்வன்’ கதை மாந்தர்களான வந்தியத்தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பாத்திரங்களை முதன்மைப்படுத்தி படம் எடுக்க திட்டமிட்ட எம்.ஜி.ஆருக்குள் பழம்பெரும் இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் மகளான பத்மா சுப்பிரமணியத்தை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் உறுதியாக இருந்தது. தன் எண்ணத்தை கே. சுப்பிரமணியத்திடம் தெரிவிக்க, ‘எனக்கு ஆட்சேபனை இல்லை’ எனச் சொல்லிவிட்டார். ஆனால் பத்மாவோ தனக்கு சினிமாவில் நடிக்க துளியும் விருப்பமில்லை எனச் சொல்லிவிட்டார். அவரின் கவனம் முழுக்க இசை மற்றும் நாட்டியத்துறையில் நாட்டம் கொண்டிருந்தது.

 

 

padma subramanyam

பத்மா சுப்பிரமணியம்



‘பொதுவாக எம்.ஜி.ஆரின் படங்கள் சீக்கிரம் முடியாது. நீண்ட கால தயாரிப்பில் இருக்கும். அதனால்தான் பத்மா நடிக்கத்  தயங்குகிறார்’ என ஒரு பேச்சு எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்டியது. ஒரு விழாவில் பத்மாவும், எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட அந்த மேடையில், “பத்மா நடிக்க சம்மதித்தால் நான்கு மாதங்களில் படத்தை எடுத்து முடித்து விடுவேன்” என எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனாலும் சினிமாவுக்கு வர பத்மா சம்மதிக்கவில்லை. பத்மா இல்லாத ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விரும்பாத எம்.ஜி.ஆரும் அந்த படத்திட்டத்தை கைவிட்டார். இன்றளவும் பரத நாட்டிய ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் பத்மா சுப்பிரமணியம்.

 

 


கவிஞர் வைரமுத்து திரைப்பட பாடலாசிரியாகவும், நாவலாசிரியாகவும் பன்முகத்தன்மையுடன் திகழ்பவர். ‘நட்பு’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார். கவிஞருக்குள் திரைப்பட இயக்குநனர் ஆக வேண்டும் என்கிற கனவும் இருந்தது. ‘இது உண்மைக்கதையுமல்ல... கற்பனைக்கதையுமல்ல’ என்கிற அறிவிப்போடு வைரமுத்து எழுதிய ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ கதை படிக்கச் சுகமானது. நிலக்கோட்டை வெள்ளையம்மா, வெள்ளையம்மா மகள் அம்சவல்லி ஆகிய நாட்டியப் பெண்களை பிரதானப்படுத்தி ஜமீன் பின்னணியில் உருவாக்கியிருந்த இந்தக் கதையைப் படமாக்க, படமாக டைரக்ஷன் செய்ய விரும்பினார் வைரமுத்து.

 

 

sreenidhi

ஸ்ரீநிதி ரங்கராஜன்



90களின் தொடக்கத்தில் பரத நாட்டிய உலகில் புதிய நட்சத்திரமாய் உருவெடுத்த ஸ்ரீநிதி ரங்கராஜனை மனதுக்குள் அம்சவல்லியாக நினைத்து வைத்திருந்த வைரமுத்து ‘ஸ்ரீநிதி நடிக்க சம்மதித்தால் நான் சினிமா டைரக்டராவேன்’ என பத்திரிகைகள் மூலம் ஸ்ரீநிதிக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் சினிமாவில் நடிக்க விரும்பாத ஸ்ரீநிதி அதை நிராகரித்தார். வைரமுத்துவும் இயக்குநராகும் ஆசையை கைவிட்டார். அந்த ஸ்ரீநிதி ரங்கராஜன்தான் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியானார். இப்படி அன்றொரு நாள், நாட்டிய தாரகை பத்மா எம்.ஜி.ஆருக்கு ‘நோ’ சொன்னார். பின்பொரு நாள் நாட்டிய தாரகை ஸ்ரீநிதி வைரமுத்துக்கு ‘நோ’ சொன்னார்.


முந்தைய பகுதி :

நயன்தாராவுக்கும் சரோஜாதேவிக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக்! - பழைய ரீல் #1 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.