ndhd

Advertisment

இந்திய மக்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு ஊரடங்கினை இதற்கு முன்னர் சந்தித்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் 9 வாரங்களாக 1.3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே அடங்கியிருந்தனர். ஒட்டுமொத்த தேசமே இதுவரை இப்படியொரு அனுபவத்தைச் சந்தித்ததில்லை என்று சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியின் அச்சுறுத்தலால் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட இந்திய ஜனநாயகம் சிறைபிடிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் வரும் சந்ததியினருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகஇயக்குநர் பரத்பாலா 'மீண்டும் எழுவோம்' என்ற இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த தேசிய ஊரடங்கை இந்தப் படம் நினைவுகூர்கிறது. வரும் சந்ததியினர் இப்படி நடந்ததா, நம்பமுடியவில்லையே என்று ஆச்சரியப்படும் நிகழ்வு இது. இதனைக் காட்சிப்படுத்த பரத்பாலாவின் குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதற்காக அனைத்து தொழில்நுட்பங்களுமே உதவியிருக்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் இந்தியர்கள் வீட்டில் சிறைப்பட்டிருந்த போது, இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும், இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர். 14 மாநிலங்களில், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் முறையாக அனுமதிப்பெற்று பயணப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தருணத்தை ஆவணப்படுத்தும் விதமாக, இந்தக் குழுக்கள் படம்பிடித்துள்ளனர். காஷ்மீரிலிருந்து கேரளா வரை, குஜராத்திலிருந்து அசாம் வரை, ஹரித்வாரிலிருந்து ஸ்பிடி பள்ளத்தாக்கு வரை, லக்னோவிலிருந்து பெங்களூரு வரை, தாராவியிலிருந்து செங்கோட்டை வரை விரிந்து கிடக்கும் இந்தியாவைக் காட்சிகளாகக் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது.

Advertisment

இதற்கான தலைமைக் கட்டுப்பாட்டு அறை மும்பையில் அமைக்கப்பட்டது. அங்கு ஒரு குழு 24 மணி நேரமும், தேசம் முழுவதிலுமிருந்த குழுக்களுடன் ஒருங்கிணைந்து உழைத்தனர். களத்தில் இருந்த குழுக்கள் பரத்பாலாவுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தார்கள். வீடியோ கால் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வரும் அறிவுறுத்தல்களை வைத்தே தேவைப்படும் காட்சிகளை, கோணங்களை கச்சிதமாகப் படம்பிடித்தனர். இயக்குநரால் தூரத்திலிருந்தே செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் உயிர் பெற தொழில்நுட்பம் துணை நின்றது. நாம் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்த்தியது. 14 மாநிலங்களில் படப்பிடிப்பு 'சோனி' மற்றும் 'டி.ஜி.ஐ.ல்.' படம்பிடிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் படம் இன்று மாலை வெளியாகவுள்ளது.