மத்தியப்பிரதேசத்தின் தாத் பட்டி பக்கால் பகுதியில் நேற்று இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணிக்காக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் மருத்துவர்களைக் கடுமையாகத் திட்டியதுடன் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை எதிர்பாராத மருத்துவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
பின்னர் இது தொடர்பாகத் தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் மீது கல்லெறிந்த இச்சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேயாத மான், ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவாக இருக்கும் ரத்னக்குமார் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மனிதத்தன்மை எங்கே ? இது காட்டுமிராண்டித்தனம். இதனை பார்க்கும்போது என் மனம் உடைகிறது. சில நேரங்களில் இந்த வைரஸ் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் தேவைதான் என தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.