உலகப் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப், தற்போது மாஸ்டர் செஃப் இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் உருவாகவுள்ளது. பல்வேறு மொழிகளில் உருவாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் இந்தி மொழிக்கான உரிமையை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிக்கான உரிமைகளையும் சன் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது.
இந்த நிகழ்ச்சியைத் தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்கவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பிடாடி என்ற இடத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதற்கான படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.
இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.
இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.
'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில், சுந்தர்.சியின் தங்கையாக தமன்னா வருகிறார். அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்வது போலவும் அது தற்கொலை இல்லை என சுந்தர்.சிக்கு தோன்றுகிறது. தமன்னா மறைவிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவரை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதை திகில் கலந்து காமெடியுடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் அரண்மனையின் முந்தைய படங்களில் வரும் திருவிழா, சாமியார், இரண்டு ஹீரோயின்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.