நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனன் இணைந்து பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்கள். அப்போதிலிருந்தே காதலிக்கிறார்கள், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என அடிக்கடி செய்திகள் உறுதியற்ற நிலையில் கசிந்து வந்தது. தற்போது ஊடகங்களில் ரகசியத் திருமணமே செய்து விட்டார்கள் என செய்திகள் பரவி வந்தது. சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் இது குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில் விஷால் கூறியிருப்பதாவது:“பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படிச் செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து மற்றும் அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரைத் திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.