Skip to main content

வெளிப்படையா கேட்குறீங்களே... உங்களுக்குக் கூச்சமே இல்லையா? - மாரி செல்வராஜை கலாய்த்த தனுஷ்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

mari selvaraj

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் மாரி செல்வராஜ், யோகி பாபு, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ad

 

படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்வில் பேசுகையில், "ஒரு நாள் எனக்கு ஃபோன் வந்தது. ஃபோன் எடுத்தவுடன் 'நான் தனுஷ் பேசுகிறேன்' என்று ஒரு குரல் கேட்டது. அதை ரியலைஸ் பண்ணவே எனக்கு ரொம்ப டைம் எடுத்துச்சு. சந்தோஷ் சார் உங்க நம்பர் குடுத்தாரு... நேர்ல மீட் பண்ணலாமா என்றார். அவர் அப்போது 'பரியேறும் பெருமாள்' படம் பார்க்கல. படம் ரிலீஸாகி பத்து நாள்ல இது நடக்குது. நான் நேர்ல போய் மீட் பண்ணேன். தனுஷ் சார், 'நான் பார்க்குற மனிதர்கள் எல்லாம் உங்களைப்பத்தி பேசிக்கிட்டே இருக்காங்க... அதான் உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு... எதாவது கதை இருந்தா சொல்லுங்க... நாம பண்ணலாம்' என்றார். பின் அவரே ஏதாவது கதை இருக்கானும் கேட்டார். நான் வச்சிருக்கிற கதை எல்லாம் நீங்கதான் பண்ண முடியும் சார்னு சொல்லிட்டு, 'கர்ணன்' கதைய அரை மணி நேரம் சொன்னேன். சாருக்கு கதை ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே தாணு சார்கிட்ட சொன்னார். நான் அவர்கிட்ட கதை சொல்லப்போனேன். அதற்குள் தனுஷ் சாரே கதை சொல்லிட்டார். இருந்தாலும் நான் சொல்றேன் சார்னு சொல்லிட்டு தாணு சார்கிட்ட அரை மணி நேரம் கதை சொன்னேன். உன் இஷ்டப்படி எடு... வேண்டும்கிறதை பண்ணிக்கொடுக்கிறேன் என்று தாணு சார் சொன்னார்.

 

எல்லாமே உடனே நடந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நல்ல விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் நடக்கும்னு தனுஷ் சார் சொன்னார். இந்தக் கதையை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறோம் என்று பயம் இருந்தது. இந்தப் பயத்தை தனுஷ் சாரும் தாணு சாரும்தான் போக்குனாங்க. நீ எடுத்து முடிச்சிட்டு வா... நான் இருக்கேன்னு தாணு சார் சொன்னாரு. நீங்க எடுங்க... நான் இருக்கேன்னு தனுஷ் சார் சொன்னாரு. ஒன்றரை நாள்ல பாட்டு பாடிக்கொடுத்தாரு... டப்பிங் பேசிக்கொடுத்தாரு... ஃபோட்டோஷூட் பண்ணிக்கொடுத்தாரு. ஹைதராபாத்தில் இருந்துவந்து வீட்டிற்கே செல்லாமல், இந்த மூன்றையும் முடித்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அமெரிக்கா கிளம்பிச் சென்றார். இந்த உழைப்பை இன்று வரை என்னால் நம்பவே முடியல. 

 

பின் படம் பார்த்துவிட்டு, மிகப்பெரிய உயரம் உங்களுக்குக் காத்திருக்கு என்றார். அது மட்டும்தான் சொன்னார். படம் பற்றி எதாவது சொல்லுவார்னு நினைச்சு நானும் வெயிட் பண்ணேன். பிறகு, நானே கேட்டுவிட்டேன். 'அதான் உங்களுக்கு மிகப்பெரிய உயரம் காத்திருக்குனு சொன்னனே சார். எல்லாத்தையும் அப்படியே சொல்லிரனுமா. வெளிப்படையா கேட்குறீங்களே... உங்களுக்குக் கூச்சமே இல்லையா சார்னு சொன்னார். அவரைத் தொடர்ந்து, படம் பார்த்த தாணு சார் ரொம்ப கண்கலங்கிட்டாரு. கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்தார். 'பரியேறும் பெருமாள்' முடித்துவிட்டு இருந்த தைரியத்தை விட இப்போது பல மடங்கு தைரியத்தோடு இருப்பதற்குக் காரணம் அவர் கொடுத்த அந்த முத்தம்தான்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்