
அதர்வா நடிப்பில் ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டி என் ஏ’. இதில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்க, பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சி என ஐந்து பேர் இசையமைத்துள்ளனர்.
இப்படம் வருகின்ற 20 தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில் படக்குழுவினர் குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா குறித்து பேசுகையில் அவருடைய பயோ பிக் எடுக்க விருப்பப்படுவதாக தெரிவித்தார்.
மாரி செல்வராஜ், பேசியதாவது, “அவருடன் ஒர்க் பண்ணினதில்லை. இனிமேலும் அது நடக்குமா எனத் தெரியவில்லை. எங்க இரண்டு பேருக்கும் அவ்வளவு பெரிய வாழ்க்கை இருக்கிறது. ஒரு கவிஞனுடைய வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைப்பட்டேன் என்றால் அது அவருடைய கதையாகத்தான் இருக்கும். ஏனென்றால், தமிழ் வாழ்வுடைய கொந்தளிப்பு, ஏமாற்றம், அவமானம், ஏக்கம்... என எல்லாமே நிரம்பப்பெற்ற கவிஞர் கார்த்திக் நேத்தா. யாருமே எனக்கு வேண்டாம் என நினைத்தவர் இன்று எல்லாமே எனக்கு வேண்டும் என விருப்பப்படுகிறார். நாங்க இரண்டு பேரும் அண்ணன் தம்பியாக வாழ்திருக்கிறோம். அவரை பார்த்து பயந்திருக்கிறேன்.

இந்த மேடையில் நான் கம்பீரமாக உணர்ந்த தருணம், கார்த்திக் நேத்தாவை பார்த்தது தான். காற்றாற்று வெள்ளமாக வாழ்ந்த ஒரு ஆள் இன்று நிதானமாக இருக்கிறார். சில மனிதர்கள், அவரது மனம் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு அதன்பிறகு ஒரு தெளிவு பெற்று வருவாங்க. நாம் அதுவரைக்கும் பொறுத்திருக்க வேண்டும். அதுமாதிரி தான் கார்த்திக் நேத்தா. அவர் மாதிரி நிறைய பேர் இருக்காங்க. உருப்படவே மாட்டோம் என நாம் நினைத்தவர்கள், ஒரு கட்டத்தில் அவர்களுடைய வருகை முக்கியமானதாக இருக்கும். அப்படியான ஒரு வாசலை அவர் திறந்து வைத்திருக்கிறார்” என்றார்.