மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாகப் பல கட்டங்களாக நடந்து கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுற்றது. இது தொடர்பாக துருவ் விக்ரம், இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தயாரிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது என கூறியிருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் செய்தித்தாள்கள் அடங்கிய பின்னணியில் துருவ் ரத்த கறைபடிந்த டி-சர்ட்டுடன் களைத்து போய் நிற்கிறார். அந்த செய்தித்தாள்களில் நீதிமன்ற சம்பவங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி சம்பந்தப்பட்ட விஷயங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் தெளிவாக இல்லாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மாரி செல்வராஜ், “தீப்பிடித்து எரியும் வனத்திற்குள்ளிருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான். தெக்கத்தி காளமாடன் (பைசன் )” எனக் குறிப்பிட்டுள்ளார்.