Skip to main content

"எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார்" - மாரிமுத்து குறித்து மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

mari selvaraj about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 

அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ் பாஸ்கர், பிரசன்னா, சசி, கதிர், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மாரி செல்வராஜ், நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிச்சயமாக ஒரு பெரிய இழப்பு தான். இயல்பான கதையோட்டங்களை கொண்ட கிராம கதைகளை உருவாக்கக்கூடிய அல்லது எளிமையான கதைகளை உருவாக்க கூடிய  நிறைய இயக்குநர்களுடைய தேர்வாக அவர் இருந்தார். மேலும் முதல் பட இயக்குநருக்கு ரொம்ப சப்போர்டிவாக இருந்துள்ளார். தான் ஒரு சீனியர் இயக்குநர் என்பதை முதல் பட இயக்குநரிடத்தில் அவர் காண்பித்ததே கிடையாது. இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை இன்னும் மெருகேற்றுவதற்கு அவருடன் உரையாடி, ஒரு நெருக்கத்தை உண்டாக்கி பணியாற்றுபவர். 

 

நான் நிறைய தடவை கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கும் இப்போது படம் பண்ணிக்கிட்டு இருக்கிற நிறைய இயக்குநர்களுக்கும் ஒரு உறவு இருந்தது. என்னுடன் பரியேறும் பெருமாள் நடித்தார். அதன் பிறகு எந்த படமும் பண்ணவில்லை. ஆனால் வாரத்தில் ஒரு தடவையாவது பேசிவிடுவார். அவரை பற்றி ட்ரெண்டாகிற வீடியோக்கள் எல்லாம் அனுப்புவார். அதை நான் கிண்டலடிச்சிருக்கேன், அவரும் கிண்டலடிப்பார். அவருடன் சண்டை போட்டிருக்கிறேன். முரண் பட்டிருக்கிறேன். எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார். வாழ்க்கையில் என்ன வாங்கியிருக்கீங்க, செட்டில் ஆகிடீங்களா... எல்லாத்தையும் சேமிச்சு வையுங்க என சொல்வார்.

 

ஒரு இயக்குநரோட அழுத்தத்தை புரிஞ்சிகிட்டு, என்னோட அரசியலையும் புரிஞ்சுகிட்டு, பரியேறும் பெருமாள் படத்தில் மிக பெரிய பங்களிப்பை கொடுத்திருந்தார். படத்தில் கார் மேல் உட்கார்ந்து ஹீரோ பேசும் வசனம் அவர் தான் வைக்க சொன்னார். அதை காட்சியாக காட்டாமல் வசனத்தில் வையுங்கள் என்றார். அவர் சொன்னதை போல் வைத்தேன். அது எந்தளவு தாக்கத்தை உண்டாக்கியது என்று பிறகு தான் தெரிஞ்சது. கர்ணன், மாமன்னன் படத்தில் அவர் இல்லாதது வருத்தமாக இருந்தது என சொன்னார். அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார். நானும் அடுத்த படத்தில் நடிக்க வைக்க யோசித்து வைத்தேன். ஆனால் இப்படி ஆகும் என நினைக்கவில்லை. நல்ல சமுதாயத்தை விரும்பக்கூடிய மனிதரை இழந்துவிட்டோம்.  " என்றார்.   

 

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.