Skip to main content

சிம்புவுடன் நடிக்கும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Manushyaputhiran

 

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'பத்து தல'. இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது.

 

இந்நிலையில், 'பத்து தல' படத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இப்படத்தின் பெயரை தமிழ் சினிமாவின் பிரபல 10 இயக்குனர்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் பணிகள் நிறைவடைந்ததும், 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படத்தில் தன்னை ஹீரோவாக நினைப்பதுபோல நிஜத்தில் மோடியை நினைக்கிறார் - ரஜினி குறித்து மனுஷ்யபுத்திரன்

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
​rajini



சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால்  யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

 
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,
 

மோடியின் பலம் என்பது தொடர்ந்து மிகைப்படுத்தி காட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் 1989க்கு பிறகு தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. இதற்கு பாஜகவும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவின் அரசியல் என்பதே கூட்டாட்சியை நோக்கி சென்றுவிட்டது. 
 

எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்தபோதும் கூட பாஜக தனித்து வெற்றிப்பெறவில்லை. அதிலும் பலபேர் கூட்டணியில் இருந்தனர். வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கூட்டணி வைத்திருந்தனர். மத்தியில் ஆளும் பாஜக, மோடி என்கிற தனிநபரால் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. 
 

அப்படி இருக்கும்போது மோடியை பலசாலியாக ரஜினி புரிந்துகொண்டிருக்கிறார். கடந்த தேர்தலின்போது பாஜக 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றது. அப்படிப்பார்த்தால் 3ல் ஒரு பங்குதான் பாஜகவுக்கு இருந்தது. எதிர்க்கட்சிகள் சிதறி கிடந்தபோது, கூட்டணி வைத்துத்தான் இந்த வாக்குகளை பாஜக பெற்றது. 
 

இந்தியாவைப் பொறுத்தவரை எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதுதான் எதார்த்தம். அப்படியிருக்கும்போது அவரை தனிப்பெரும் சக்தியாக மிகைப்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

Manushyaputhiran

 

பாராளுமன்றத்தில் 400 இடங்களை வைத்திருந்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியது. 67க்கு பிறகு இவை மாறுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைகிறது. இந்தியாவையே ஆண்ட கட்சி காங்கிரஸ் இன்று பல்வேறு வகைகளில் பலவீனம் அடைந்திருப்பதை பார்க்கிறோம். ஒரே ஒரு முறை தனித்து ஆட்சி அமைத்ததற்காக அவரை வெல்லவே முடியாத சக்திபோல் நம்புவது மிகவும் கேலிக்கூத்தானது.
 

நாடு முழுக்க இன்று பாஜகவுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அவர்கள் கையில் வைத்திருந்த பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள். பாஜகவின், மோடியின் சக்தியை ஊதி பெருக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாடு முழுக்க சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் மோடி ஒரு தனி மனிதர் போன்றும், ஏதோ சிறுவர்களெல்லாம் சேர்ந்துகொண்டு அவரை எதிர்ப்பது போன்று ரஜினி நம்புவது வேடிக்கையாக உள்ளது. 
 

படங்களில் நடிக்கும் சண்டைக்காட்சிகளில் எல்லோரையும் அடித்து போடுகிற ஒரு ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்வதுபோல, மோடியையும் நம்புகிறாரோ என்று தோன்றுகிறது. திரைப்படத்தில் வருவதும் சித்தரிக்கப்பட்டது. மோடியின் தனிபெரும் ஆற்றல், செல்வாக்கு என்பதும் சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். 
 

 

 

 

Next Story

நக்கீரன் பத்திரிகையின் வாயை மூடுவதற்கு முயற்சி செய்கிறார்கள்: மனுஷ்யபுத்திரன்

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
Manushyaputhiran



நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 
 

கவர்னர் அலுவலகம் நக்கீரன் பத்திரிகையை பார்த்தும், நக்கீரன் ஆசிரியரை பார்த்தும் பயப்பட ஆரம்பித்துவிட்டது என்பதினுடைய அடையாளம்தான் இந்த கைது. 
 

நிச்சயமாக இந்த கைது என்பது, அவர்கள் எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள். நக்கீரன் அதனை வெளிக்கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் அடிப்படையில்தான் இதனை செய்துகொண்டிருக்கிறார்கள். 
 

ஒரு பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்திக்காக அந்த பத்திரிகையின் ஆசிரியரை நேரடியாக கைது செய்வது, அதுமட்டுமல்ல தேச துரோக வழக்கில் கைது செய்வது என்பது இங்கு எவ்வளவு பெரிய பாசிச ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. 
 

கவர்னர் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டு, அந்த குற்றச்சாட்டிற்கு கவர்னரே விசாரிக்க உத்தரவிட்டு அதுபற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கிறபோது நக்கீரன் கோபால் அவர்களை கேள்வி கேட்பதற்கான உரிமை அந்த விசாரணை ஆணையத்திற்குத்தான் இருக்கிறது. 
 

அவர்கள் அதிகபட்சமாக போனால் நக்கீரன் ஆசிரியரை அழைத்து எந்த அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டீர்கள் என்று கேட்கலாம். அதற்கு பதிலாக இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறார்கள் என்று சொன்னால் நக்கீரன் ஆசிரியரின் வாயை மூடுவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள். நக்கீரன் பத்திரிகையின் வாயை மூடுவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மறைக்க முயன்ற உண்மைகளை நக்கீரன் ஆசிரியர் வெளிப்படுத்திவிடுவாரோ என்று அவரை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.

 
ஆனால் நக்கீரன் கோபால் அவர்கள் ஊடகத்துறையின் ஒரு போராளி. அவர் சந்திக்காத பிரச்சனைகளா, சவால்களா, எத்தனை எத்தனை வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருக்கின்றன. அத்தனையிலும் வென்று வெளியே வந்தவர் அவர். அதுமட்டுமல்ல நக்கீரன் பொய் செய்தி வெளியிட்டது, தவறான செய்தியை வெளியிட்டது என்று எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டிருக்கிறதா? ஆதாரம் இல்லாத எந்த செய்தியையும், பின்புலம் இல்லாத எந்த செய்தியையும் நக்கீரன் வெளியிட்டது கிடையாது. 
 

மிகப்பெரிய அராஜகங்களையெல்லாம் எதிர்த்து வெற்றிப்பெற்று வந்தவர் நக்கீரன் கோபால் அவர்கள். நிச்சயமாக இந்த அராஜகத்தையும் எதிர்த்து அவர் வெற்றி பெறுவார். 
 

ஊடகத்துறை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நக்கீரன் ஆசிரியரோடு இணைந்து நிற்க வேண்டும். ஏனென்றால் இது நக்கீரன் ஆசியருக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு கைது அல்ல. ஒட்டுமொத்த ஊடகத்துறையும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறது. 
 

எங்களுக்கு எதிராக செய்தி வெளியிடாதே, எங்களை விமர்சிக்காதே, விமர்சித்தால் கைது செய்வோம் என்று. கவர்னர் என்ன கடவுளா? கவர்னர் என்ன அரசரா? அவரை கேள்வி கேட்டால் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான ஒரு விஷயமா? இந்த சட்டப்பிரிவு என்பதே, எவ்வளவு தூரம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 
 

ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும், சிந்தனையாளர்களும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த கைது கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்டிருக்கும் ஒரு சவால். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டும் என்றார்.