
நாயகன் படத்திற்கு பிறகு 37ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மணிரத்னம் பேசுகையில், “நான் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட போது கமலை பார்த்து பேசினேன். பின்பு சாரு ஹாசனை கூப்பிட்டு என்னை மகேந்திரன் கிட்ட கூப்பிட்டு போகச் சொன்னார். எனக்கு மகேந்திரனை ரொம்ப பிடிக்கும். வேலை செய்தால் அவருடன் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். அதனால் அவரை பார்க்க போயிருந்த போது, அவர் ஷூட் முடித்து வந்திருந்தார். அவரிடன் சாருஹாசன் என்னை பற்றி சொல்ல, அதைப் பற்றி எதும் சொல்லமால், சாருஹாசனிடம், நான் கப்பலில் இருந்து ஷூட் முடிச்சிட்டு வந்திருக்கேன், பீர்-லாம் எடுத்து வந்திருக்கேன், நீங்க சாப்பிடுறீங்களான்னு கேட்டார். பின்பு மகேந்திரனும் சாருஹாசனும் பீர் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மகேந்திரன் உதவி இயக்குநரா வேலை கொடுக்கவில்லை, அது பரவாயில்லை, பீர் சாப்பிடிறியா என்று கூட கேட்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமா போய்டுச்சு. மகேந்திரன் கிட்ட இதுப் பற்றி சொன்ன போது, நான் பண்ணின நல்லது இது மட்டும்தான்னு சொன்னார்.
அடுத்து திருப்பியும் கமலிடம் வந்தேன். அவர் ஒரு இங்கிலீஷ் புக்கை கொடுத்து ஒரு வாரத்தில் அந்த புக்கிற்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதிட்டு வரச் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லாததால் ரெண்டு மூணு நாளில் முடித்து விட்டேன். இதை கமலிடம் சொன்ன போது பாரதிராஜாவை பார்க்கச் சொன்னார். பாரதிராஜாவிடம் ஸ்க்ரீன் ப்ளே சொன்னேன். ஒரு எழுத்து புரியாத மாதிரி சொன்னேன். அதை கேட்ட அவர், இது போல ஒருவர் கூட எனக்கு கதை சொன்னதில்லைன்னு சொன்னார். அதை இன்று வரையும் சொல்லி என்னை கலாய்ப்பார். அப்போதுதான் நினைத்தேன், முன்னேறி வர வேண்டும் என்றால் நாமே முட்டி மோதி வர வேண்டும் என்று. அப்படி முயற்சி செய்து கொண்டிருந்த போதுதான் கமல் கூப்பிட்டு நாயகன் பண்ண சொன்னார். அது தான் எனக்கு பிக் பிரேக் கொடுத்தது. அதோடு சுதந்திரமாகவும் படம் பண்ண உதவியது. நாயகனுக்கு முன்னாடி தயாரிப்பாளர்கள், உனக்கு எதுவும் தெரியாது நான் சொல்றதை பண்ணு என சொல்லிட்டு இருந்தார்கள். அவர்களுடன் ஒவ்வொரு படமும் ஒரு போராட்டமாக இருக்கும். ஆனால் நாயகனுக்கு பிறகு, எங்களுக்கு தெரியாது உனக்கு தெரியும் என சொன்னார்கள். அதற்கு பிறகு தான் படம் பண்ண எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது” என்றார்.