மணிரத்னம் கடைசியாக கமலை வைத்து ‘தக் லைஃப்’ படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூனில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை அடுத்து சிம்புவுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ருக்மிணி வசந்த் ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் சாய் பல்லவியை வைத்து ஒரு காதல் படம் எடுக்கவுள்ளதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் இரண்டையுமே மணிரத்னம் ஒரு பேட்டியில் மறுத்திருந்தார். இதனால் மணிரத்னம் அடுத்து யாரை இயக்கவுள்ளார் என கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலா வந்தது.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அவர் ஒரு படமெடுப்பதாகவும் இதில் ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் மெட்ராஜ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் மணிரத்னமே தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துருவ் விக்ரம், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதன் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மணிரத்னம் ஏற்கனவே துருவ் விக்ரமின் தந்தையும் நடிகரான விக்ரமை வைத்து ‘ராவணன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.