Skip to main content

குத்துப்பட்ட நடிகை... கங்கனாவிடம் வேண்டுகோள்! 

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

malvi

 

‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில், 'ஹோட்டல் மாலினி' என்றொரு படத்தில் நடித்துள்ளார். 

 

இந்நிலையில், சினிமா தயாரிப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.

 

இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார், நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் யோகேஷ், நடிகை மால்வி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், மும்பையில் உள்ள ஒரு கஃபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் செல்லும்போது, நான்கு முறை கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

 

இதில் காயமடைந்த மால்வி, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மால்வி பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோருகிறேன். நானும் மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் கங்கணா ரணாவத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.

 

மும்பை நகரில் எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தை நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தில் இவர்களின் ஆதரவு வேண்டும்" என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கனா புகைப்பட சர்ச்சை - காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகத் தேசிய மகளிர் ஆணையம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
NCW demands action from Election Commission against Congress regards kangana photo issue

நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.

Next Story

“நடிகை என்பதில் நம்பிக்கை இல்லை” - கங்கனா ரணாவத்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
kangana ranaut speech about election

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பிரச்சாரத்தையும் தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று பா.ஜ.க கட்சி நிர்வாகிகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடினார். பின்பு பேட்டியளித்த அவர், “இமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோரும் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று நமக்கு இந்த பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. 

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இமாச்சல் மற்றும் மண்டி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். நான் அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்களுடன் சேர்ந்து நடப்பேன், வெற்றி பெறுவேன். அதற்கு நாங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். உலகில் அதிகம் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்தான் எங்களின் நிகழ்ச்சி நிரல். எங்களது பெயராலும், உழைப்பாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்பவில்லை, ஆனால் பிரதமர் மோடி செய்த பணியால் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

கட்சி வெற்றிபெற்றால், நானும் வெற்றிபெறுவேன். பிரதமர் மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நாங்களும்  வெற்றிபெறுவோம். நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்லது நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டேன். நான் கட்சியின் உத்தரவை பின்பற்றக்கூடிய ஒரு சாதாரண தொண்டர்” என்றார்.