Skip to main content

ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ஆர்யா பட நடிகை!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Mahima Nambiar

 

பிரபல மலையாள நடிகையான மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'புரியாத புதிர்', 'கொடிவீரன்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆகிய படங்களுக்கு கணிசமான வரவேற்பு கிடைத்தது. மௌனகுரு புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மகாமுனி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

 

இந்த நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை மஹிமா நம்பியார் வென்றுள்ளார். இத்தகவலை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ள மஹிமா நம்பியார், இந்த விருதினை வென்றது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் இயக்குநர் சாந்தகுமாருக்கும் நடிகர் ஆர்யாவிற்கும் மஹிமா நம்பியார் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பயந்து பயந்துதான் வேலை பார்த்தேன்" - மகிமா நம்பியார்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

mahima nambiyar speech at naadu press meet

 

தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான எம்.சரவணன், புதிதாக இயக்கி வரும் படம் 'நாடு'. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாகவும் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.  சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை சத்யா மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பத்திரிகையாளர்களைப் படக்குழு சந்தித்துள்ளது.  

 

அப்போது இயக்குநர் சரவணன் பேசுகையில், "இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையைப் பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்குச் சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதைப் பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதிலிருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்” என்று கூறினார்.

 

நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், "இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்துக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம்... இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்து விடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன். படத்தில் என்னை விட தர்ஷன் - இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்" என்றார். 

 

 

Next Story

"மானம் போச்சு மரியாதை போச்சு..." - இயக்குநரின் பதிவிற்கு நடிகையின் கமெண்ட்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

mahima nambiyar comment to cs amudhan tweet

 

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இயக்குநர் சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை டேக் செய்துள்ளார். அந்த பதிவில், "கடினமான உழைப்பாளிகள் ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் சமமாக அர்ப்பணிப்புடன் உள்ளனர். இதோ மஹிமா நம்பியார் அவரது வரிகளை தீவிரமாக கற்றுக்கொண்டபோது" என ஜாலியாக கலாய்த்து குறிப்பிட்டுள்ளார்.  

 

சி.எஸ் அமுதனின் பதிவை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அவங்க கடினமான உழைப்பை பாக்கும் போது அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு" என கேலியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மஹிமா நம்பியார், விஜய் ஆண்டனியின் பதிவிற்கு, "அய்யய்யோ. என் ஸ்டைல் ​​போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு." என கிண்டல் கலந்து பதிவிட்டுள்ளார்.