“இது ஒரு வாழ்நாள் அனுபவம்...”- ரசிகர்களின் கேள்விகளுக்கு மகேஷ் பாபு பதில்!

mahesh babu

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடுத்த படத்தின் பெயரை வெளிய்யிட்டார். 'கீதா கோவிந்தம்' இயக்குனர் பரசுராமன் இயக்கும் இந்தப் படத்திற்கு 'சர்காரு வாரிபட்டா' எனப் பெயர் வைத்துள்ளனர்.

கரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்துகொண்டு பிரபலங்கள் தங்களது ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்புக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மகேஷ் பாபுவும் தனது ரசிகர்களிடம் ட்விட்டரின் வாயிலாகப் பேசினார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு மகேஷ்பாபு அளித்த பதில்களின் தொகுப்பு.

''உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்பு இருந்திருக்கிறதா?'' என்று கேட்ட ரசிகருக்கு பதிலளித்த மகேஷ், "இருந்தது. 26 வயதில். அதன்பின் அவரையே மணந்து கொண்டேன். என் மனைவி நம்ரதா ஷிரோத்கர்" என்று பதில் கூறினார்.

இன்னொரு ரசிகர், ''நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "நல்ல நடிகனாக, என் குழந்தைகளுக்கு அற்புதமான அப்பாவாக, என் மனைவிக்கு சிறந்த கணவனாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.

அவரது மகனுக்கும் திரைப்பட நாயகனாக விருப்பமா என்று ஒருவர் கேட்டதற்கு, "அவருக்கு விருப்பம் என்றுதான் நினைக்கிறேன். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

இந்த ஊரடங்கு பற்றிய கேள்விக்கு, "இது ஒரு வாழ்நாள் அனுபவம். பல விஷயங்களை என் குடும்பத்தினரோடு செய்திருக்கிறேன். நான் வேலை செய்து கொண்டிருந்தால் இதையெல்லாம் செய்திருக்க முடியாது" என்று மகேஷ் பாபு கூறினார்.

mahesh babu
இதையும் படியுங்கள்
Subscribe