விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் 'அடியே'. பேரலல் யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வரவேற்பின் காரணமாக ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினரின் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர பிரபு, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார், நாயகி கௌரி ஜி. கிஷன், ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பாளர் முத்தையன் ஆகிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், ''செந்தாழினி என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். அதில் நடித்திருக்கிறேன். இது ஒரு சவாலான கதாபாத்திரம். ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது.
சமூக வலைத்தளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, 'ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்' என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி என்பதனை ஒரு படைப்பாளி யோசிக்க முடியும். ஆனால் அதை திரையில் காட்சிகளாக காண்பிப்பது கடினமானது. அதனை எளிதாக்கிய ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய்க்கும் என்னுடைய நன்றி.
ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ''இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் முதலீடு செய்து திரைப்படத்தை தயாரித்து, திரையரங்குகளில் வெளியிட்டு, அதில் வெற்றி பெற்று, அதன் ஊடாக லாபத்தை காண்பது என்பது அரிதானது. அந்த வகையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிப்பை பொறுத்தவரை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் வழிகாட்டுதல் தான் காரணம். படத்தை பார்த்த ரசிகர்கள் ஏராளமானவர்கள் எனது நடிப்பை பாராட்டினார்கள். இவை அனைத்தும் இயக்குநரைத்தான் சாரும்.
இப்படத்தின் படத்தொகுப்பு வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதற்காகவும் அறிமுக படத்தொகுப்பாளர் முத்தையனை பாராட்டுகிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.