"அல்லு அர்ஜூனே ஆள் அனுப்பி கேட்டுக்கொண்டதால்தான் சம்மதித்தேன்" - மதன் கார்க்கி பேச்சு

 Madhan Karky

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், "புஷ்பா படத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நான் நிறைய படங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் இந்தப் பட வாய்ப்பை மறுத்தேன். ஆனால் மறுநாள் அல்லு அர்ஜூனே ஆள் அனுப்பி நான்தான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் அன்பால்தான் வேலை செய்ய ஆரம்பித்தேன். காட்டுக்குள் இப்படத்தை எடுத்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் அத்தனை அற்புதமாக வந்திருக்கின்றன.

அல்லு அர்ஜுன் முழுப்படத்திலும் அவருக்கென பிரத்தியேகமான உடல்மொழியை பின்பற்றியிருக்கிறார். அது பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை இப்படம் கொண்டுவரும்படி உழைத்திருக்கிறோம். தமிழில் நாயகனுக்கு 'ரா' வராமல் இருந்தால் எப்படி இருக்கும் என புதிதாக முயற்சித்தோம். சேகர் அதை அட்டகாசமாப் பேசியுள்ளார். சுகுமார் மிக அழகாக இப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோருக்கும் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றியைப் பெறும். ராஷ்மிகா சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்தியிருக்கிறார். பகத் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்" எனக் கூறினார்.

madhan karky pushpa
இதையும் படியுங்கள்
Subscribe