Skip to main content

“எல்லோரும் சேர்ந்து அவதூறு பேசுவது சரியா?”- கேதாருக்கு ஆதரவு தந்த பாடலாசிரியர்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
kedar jadhav

 

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பின்வரிசையில் களமிறங்கிய கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாடாமல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சென்னை அணி ரசிகர்களால் கருதப்படுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் கேதாரை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வைரலாகின.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் கேதார் ஜாதவ், 4 இன்னிங்ஸில் களமிறங்கி 59 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 58 ரன்கள் ஆகும். 

 

இதனையடுத்து, கேதார் ஜாதவை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பாடலாசிரியர் விவேக் கேதாருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் நாம் தெரிவிக்கும் கருத்துகள் மற்றவர்களின் கருத்துகளோடு தீவிரமாகக் கலந்து அப்படியே ஒரு நிலச்சரிவைப் போன்ற தாக்கத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?

 

ஒருவர் மீது ஒரு கிலோ எடையுள்ள கல்லை வைத்தால் பரவாயில்லை, ஆனால் அதேபோல 100 கற்களை அவர் மீது வைத்துவிட்டு அதன்பின் மீண்டும் 1 கிலோ கல்லை வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

 

எனக்கும் ஜாதவ் ஆடிய விதம் பிடிக்கவில்லை. அதுவும் 5 பந்துகளில் 26 ரன்கள் தேவை எனும் போது ஒரு ரன் கூட அவர் எடுக்கவில்லை. ஆனால், அவரது இந்த அணுகுமுறை அவர் மனதிலிருந்த அழுத்தத்தினால் இருக்கலாம். அவர் ஊக்கம் குறைந்திருக்கலாம்.

 

ஆம். ஒரு விளையாட்டு வீரர் இதைக் கையாள வேண்டும். அதோடு எதிர்த்துப் போராட வேண்டும். அவர் தன்னிலைக்கு வரும் வரை உட்கார வைக்கப்பட்டு, இன்னொரு நல்ல திறமையைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

ஆனால், எல்லோரும் சேர்ந்து அவர் மீது அவதூறு பேசுவது சரியா? ஜாதவுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆறுதல்கள். அவர்கள் நன்றாக ஆடும்போது கொண்டாடுவது மட்டுமல்ல, மோசமான கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

 

இது நமக்கு வெறும் ஒரு ட்வீட்டாக இருக்கலாம். ஆனால், இதன் தாக்கம், அதுவும் எல்லோருடைய ட்வீட்டுகளும் சேர்ந்து தரும் தாக்கம் பலரை மொத்தமாக வீழ்த்தும். சென்னை ஐபிஎல் குடும்பத்திலிருந்து ஜாதவுக்கு என் அன்பை அனுப்ப முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்