
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த 10 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் தாயிடம், தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர் சின்னதுரையின் தாயாரிடம் வீடியோ கால் மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, “தைரியமா இருங்க. எதுக்கும் கவலைப்படாதீங்க” என முதல்வர் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியர் வேல்முருகன் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “நாங்குநேரி இரத்த சரித்திரம் பள்ளியிலிருந்து எழுதப்படுகிறது. குடி பெருமைகளே மை தருகிறது. தலை நிமிர முயற்சித்தவனின் உயிர்தான் பிரிகிறது. அதை என்னனுடா தலைமுறை படிக்கிறது?” என தெரிவித்துள்ளார்.