Skip to main content

“கவிஞர்கள் பேரு போஸ்டர்ல வரும்கிறதால அதை கெட்டியா புடிச்சுக்கிட்டேன்” - பாடலாசிரியர் முத்தமிழ்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Muthami - Paattu Kathai 

 

நக்கீரன் ஸ்டூடியோ 'பாட்டுக் கதை' தொடருக்காக பாடலாசிரியர் முத்தமிழ் அவர்களைச் சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்குப் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

 

நான் திருச்சியைச் சேர்ந்தவன். சிறுவயது முதலே பள்ளி போட்டிகளில் கலந்து கொண்டு கைத்தட்டல்கள் பெறுவது வழக்கம். இன்ஜீனியரிங் முடித்த பிறகு வேலைக்கு சென்றேன். பள்ளியில் பெற்ற அந்த கைத்தட்டல்களை மிஸ் செய்வது போல் இருந்தது. அதனால் சினிமா வாய்ப்புகள் தேடினேன். திருச்சியில் மேடைகளில் நான் பாடிக்கொண்டிருந்தேன். என்னுடைய பயணம் தொடர்ந்து இசைத்துறையில் தான் இருந்தது. அதன் பிறகு கிடைத்தது தான் பாடலாசிரியர் என்கிற இடம். முதலில் 'உதயன்' என்கிற திரைப்படத்தில் பாடல் எழுதினேன்.

 

தொடர்ந்து அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் எழுத ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ராம்குமார் போன்ற பல புதிய இயக்குநர்கள் வந்தனர். அவர்களுக்கு என்னுடைய எழுத்து பிடித்திருந்தது. அவர்களோடு இப்போது வரை நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன். சினிமாவுக்கு வருவதற்கான போராட்டங்கள் அதிகமாகவே இருந்தன. சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது.

 

போஸ்டரில் பெயர் வரும் என்பதால் பாடலாசிரியர் பணியை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். நான் நிறைய புத்தகங்கள் படித்ததில்லை. சினிமா பாடல்கள் கேட்டு தான் என்னுடைய எழுத்தறிவு வளர்ந்தது. ஒவ்வொரு கவிஞரின் ஸ்டைலையும் ஆராய்ச்சி செய்தேன். அதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். மெட்டுக்கு கச்சிதமாக எழுதுவது எனக்கு நன்றாக வரும். எழுதுவதற்கு நான் சிறப்பு பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கொண்டதில்லை. இசைக்குப் பொருத்தமாக பாடல் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். 

 

கண்ணதாசன் சாருடைய எழுத்து நாம் நேரடியாகப் பேசுவது போல் இருக்கும். வாலி சாரின் எழுத்து இசைக்கு மிகாமல் அழகாக இருக்கும். கவிதையும் பாடலும் வேறல்ல என்பதை வைரமுத்து சார் உணர்த்தினார். கபிலன் சாருடைய எழுத்து இயல்பாக இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். சென்னையில் நான் ஒரு இசைக்கலைஞராக பணியாற்றி வந்தேன். பெரிய இயக்குநர்களை என்னால் சந்திக்க முடியாது. எனவே 'நாளைய இயக்குநர்' தொடரில் பங்கேற்பவர்களை அப்போதே சந்தித்தேன். அதற்கு கண்ணபிரான் என்கிற என்னுடைய நண்பர் எனக்கு உதவினார். அந்த இயக்குநர்களின் மூலம் தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பாடலாசிரியராக வர முடிந்தது.
 

 

 

சார்ந்த செய்திகள்