Advertisment

லைகா தொடர்ந்த வழக்கு - விஷாலுக்கு நீதிமன்றம் கேள்வி

lyca vishal case update

Advertisment

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் விஷால்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.800 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதியாவது செலுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisment

பின்பு விஷால் தரப்பு, லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்டது. அப்போது பேசிய நீதிபதி ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும் லைகா தரப்பில் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைவருகிற நவம்பர் 1ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

MADRAS HIGH COURT lyca actor vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe