இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் விக்ரம் திரைப்படம் வெளியான 3 நாளில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல்செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குதனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும்,பொதுவெளியில், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூப்பை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான் கமல்ஹாசன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், ”லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.