லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் ரசிகர்களுடன் பார்த்த லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ரசிகர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கினார். இருப்பினும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டத்தில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணத்தால் மற்ற இரண்டு இடங்களிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு விரைவில் கேரள மக்களை சந்திக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.