Skip to main content

திடீர் மரணமடைந்த சினிமா தொழிலாளி! உதவியை நாடும் படக்குழு! 

Published on 16/09/2020 | Edited on 16/09/2020
grshsh

 

"என்னை நோக்கி பாயும் தோட்டா", "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" போன்ற பல திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்துகொடுக்கும் பணியை செய்து வந்த திரு. பாலமுருகன் கடந்த வாரம் 11ம் தேதி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதியுதவி வேண்டி ”லாக்டவுன்” திரைப்பட இயக்குநர் திரு.பில்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....

 

"பலகோடி கணக்கில் வர்த்தகம் நடைபெறுவதால் திரைத்துறையில் பணிபுரிபவர்களை இந்த சமூகம் பணக்காரர்கள் என்று எண்ணிவிடுகிறது. உண்மையில் நிலவரம் அப்படியே தலைகீழானது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இங்கு சம்பளம் குறைவுதான். ஒரு தனியார் துறையில் வேலை செய்யும் ஒரு சராசரி மனிதனுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட குறைவுதான். மற்ற நிறுவனங்களில் சம்பளம் மட்டுமல்லாது ஆயுள் காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு போன்ற இதர சலுகைகள் கிடைக்கும். ஆனால் சினிமா துறையில் பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இவை எதுவுமே கிடையாது. வேலை செய்தால் கிடைக்கும் கூலி மட்டும் தான். அதை வைத்துகொண்டு தான் தங்களது குடும்பத்தை ஆயிரக்கணக்கானோர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர் தான் திரு. பாலமுருகன். கடந்த வாரம் 11ம் தேதி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.

 

படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்துகொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பாலமுருகன் ”என்னை நோக்கி பாயும் தோட்டா”, ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” போன்ற பல திரைப்படங்களுக்கு திரம்பட வேலை செய்திருக்கிறார். இருபது வருடங்கள் இந்த துறையில் பணிபுரிந்த அவரை இழந்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் பிரதீபாவும் மனைவி உஷா பாலமுருகனும் செய்வதறியாது நிற்கதியாக நிற்கிறார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடன இயக்குநர்கள், சண்டைக் கலைஞர்கள் போன்றோர்களுக்கு இருக்கும் யூனியன் அமைப்புகளை போல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எதுவும் இல்லை. குறிப்பாக படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் போன்றவை அனைத்தும் வேறு நிறுவனங்கள் செய்துகொடுக்கின்றன. திரு பாலமுருகன் அவர்கள் பணியாற்றியதும் அப்படியான ஒரு சிறு நிறுவனம் தான். அங்கு அவருக்கு உயிர் காப்பீடோ, மருத்துவக் காப்பீடோ, இதர சலுகைகளோ எதுவும் இல்லை. 

 

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு உதவுவதற்காக அவரோடு பணியாற்றிய நண்பர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அவரது மகளின் கல்விக்கும் அவர்களது திடீர் வருமான இழப்பை ஓரளவு ஈடுசெய்யவும் நிதி திரட்டி வருகிறார்கள். இந்த பணியை ”லாக்டவுன்” திரைப்பட இயக்குநர் திரு.பில்லா மேற்கொண்டிருக்கிறார். 250 உறுப்பினர்கள் கொண்ட அந்த குழுவில் இருந்து இதுவரை 40,000 ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களின் மூலமாக நிதிதிரட்ட முன்வந்திருக்கிறார்கள். சமூக அவலங்களை தட்டிக்கேட்பதிலும் சமுதாய நலனில் அக்கறையும் உள்ள ஊடக துறையினரின் உதவியை நாடி இந்த வின்னப்பத்தை வைக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாயும் தகப்பனை இழந்து வாடும் ஒரு குழந்தையின் கல்விக்கு பேருதவியாக இருக்கும். 
நன்றி.. -லாக்டவுன் திரைப்படக் குழு" என கூறியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெளியே வரமாட்டோம்...' -ஊரடங்கு முடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராத குடும்பத்தினர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Shocking incident in Kumari where the family did not come out of the house even after the corona lockdown

 

வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

50க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது; 7000 போலீசார் குவிப்பு - பரபரப்பில் கடலூர் மாவட்டம் 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மின்சார உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, மும்முடிச்சோழன் ஆகிய கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் 2006 ஆம் ஆண்டில் என்.எல்.சியால் ஒப்பந்தம் போடப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதேசமயம் விவசாயிகள் அந்த விளைநிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

இதனிடையே புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களையும் கையகப்படுத்த என்.எல்.சி முயன்று வருகிறது. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, நிலம் கொடுக்கும் குடும்பத்தவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் பணி மற்றும் சில நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் நிலங்களை கொடுப்போம் என அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேசமயம் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே என்.எல்.சி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

இதேபோல் '2006-ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வெறும் 6 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கியது போதாது' தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்குவது போல 25 லட்சம் என சமமான இழப்பீடு வழங்க வேண்டும்',  'வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்'  என வலியுறுத்தி ஏற்கனவே நிலங்கள் கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்ட விவசாயிகளும் தற்போது நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதையடுத்து ஏற்கனவே 6 லட்சம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு கருணைத் தொகையாக மேலும் 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் இதனை ஏற்காமல் சமமான இழப்பீடு வழங்கினால் தான் நிலங்களை ஒப்படைப்போம் என கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் கம்மாபுரம் அருகே உள்ள வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம்  உள்ளிட்ட கிராமங்களில், கடந்த  2006 ஆம் ஆண்டு நிலங்கள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலப்பரப்புகளை கையகப்படுத்துவதற்காக  என்.எல்.சி நிறுவனம் தற்போது சமப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட  பா.ம.கவினர் மற்றும்  விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி, மிரட்டி  நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க அறிவித்தது. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க தகுந்த காவல்துறை பாதுகாப்புடன்  பேருந்துகள் இயங்கும், கடைகள் திறக்கப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

neyveli nlc farmers land issue police in field and pmk members arrested 

 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர்,  விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய  நகரங்களில் மருந்தகங்கள், தேநீர் கடைகள் தவிர்த்து 75% கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் காவல்துறையினர் பாதுகாப்புடன் 100% அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 50% மட்டுமே இயக்கப்படுகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும் செல்லும் தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய பாமகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.