Skip to main content

லியோ வழக்கறிஞர்கள் குழு கார் விபத்து - தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

leo producers lawyer team car  accident

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகத் தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனிடையே லியோ படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், 19 ஆம் தேதி காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சியை 4 மணிக்கே திரையிட சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி தர மறுத்தது நீதிமன்றம். மேலும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தது. 

 

இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் குழு 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டி உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க சென்னை தலைமைச் செயலகத்திற்குக் காரில் சென்றனர். பின்பு உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது உள்துறைச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து இன்றைக்குள் முடிவை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேற ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லியபோது, அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

 

கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி கீழே விழுந்து லேசாக காயத்துடன் உயிர் தப்பினார். வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை சேதமடைந்த நிலையில் அதற்கான பொறுப்பை வழக்கறிஞர் குழு ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என  கூறப்படுகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்