வாரிசுபடத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது காஷ்மீரில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அந்த படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அவரது பகுதி முடிந்து விட்டதாகக் கூறி படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பணியாற்றிய அனுபவங்களைக் குறிப்பிட்டு பலரையும் பாராட்டியிருந்த மிஷ்கின், "லோகேஷ் கனகராஜ்ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும்ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினான்.அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மிஷ்கினின் பாராட்டுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மை டியர் இயக்குநர் மிஷ்கின் சார். உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். அதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.