கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழல் நீடித்து வருவதால் ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய காட்சிகளை சென்னையில் அரங்குகள் அமைத்துப் படமாக்கி வருகிறது படக்குழு. இதற்காக கோகுலம் ஸ்டூடியோ வளாகத்தினுள் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் கோகுலம் ஸ்டூடியோ வளாகத்தின் மற்றொரு பகுதியில்,ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில், அண்ணாச்சி என அழைக்கப்படும் சரவணன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்டூடியோ வளாகத்தினுள் ரஜினியும் சரவணனும்சந்தித்து பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.