நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டுவிஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியும் அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறினார்.
இந்த நிலையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜயகாந்த் வீட்டில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிறகு, பிரேமலதாவின் சகோதரி, சண்முக பாண்டியனை காண்பித்துஹீரோவாக நடித்து வருகிறார்.நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்றார். அந்த வார்த்தை, நிறைய யோசிக்க வைத்தது. எதாவது நம்ம பண்ணியே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். விஜயகாந்த் சார் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார். தர்ம காரியங்களும் பண்ணியிருக்கிறார். அதோடு நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணுவார். மற்றவர்களை வளர்த்து விடுவதில் அவருக்கு அவ்ளோ சந்தோஷம். நானும் அவர் நடித்த கண்ணுபடப் போகுதய்யா படத்தில், மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்தேன். என்னை நிறைய ஊக்கப்படுத்துவார்.
அதனால் சண்முக பாண்டி நடிக்கும் படத்திற்கு பப்ளிசிட்டி செய்யும் வேலையை முழுவதுமாக இறங்கி பண்ண முடிவெடுத்துள்ளேன். அதோடு அந்த படக்குழுவினர் ஒப்புக்கொண்டால்அந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில்,ஃபைட் சீனோ, பாட்டோ அவர்கள் என்ன பண்ண வேண்டும் என நினைக்கிறார்களோ அதை பண்ண தயாராகவுள்ளேன். இதுமட்டுமல்லாமல் சண்முக பாண்டியனும் நானும் நடிக்கிற மாதிரி இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நடிக்க தயாராகவுள்ளேன். அதேபோல் விஜய் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” எனப் பேசியுள்ளார்.