ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் 'துர்கா' படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது 'துர்கா' படத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கூட இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.