Skip to main content

“கதறி அழுத மனோபாலா; கடைசி வரை நிறைவேறாத கனவு” - குட்டி பத்மினி பகிரும் நினைவுகள்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Kutty Padmini Interview

 

மறைந்த இயக்குநர், நடிகர் மனோபாலா குறித்த தன்னுடைய நினைவுகளை நடிகை குட்டி பத்மினி  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மனோபாலா அவர்களைப் பல வருடங்களாக எனக்குத் தெரியும். அவருடைய படங்களில் நான் நடித்திருக்கிறேன். மற்றவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவருக்கு நண்பர்கள் தான் அதிகம். அவர் இல்லாத சினிமா சங்கமே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருந்து, அதன் பிறகு இயக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நடிப்பின் மூலமாக அதை ஈடுகட்டி 500 படங்களுக்கு மேல் நடித்து வெற்றிகரமாக வலம் வந்தவர் மனோபாலா. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாண மாலை நிகழ்ச்சிக்காக அவரோடு நான் கோவை பயணித்தேன். ஜாலியான அனுபவமாக இருந்தது.

 

கலை மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர். என்னுடைய சீரியலை அவர் டைரக்ட் செய்து கொடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் ஷூட்டிங் தொடங்கி முடித்து விடுவார். அனைத்து நடிகர்களுக்கும் அவர் நண்பர். தோட்டத்தை சுற்றி வாழ்வது எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயம். திருச்சியில் இருக்கும் வெக்காளியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வார். இருவரும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். அவை அனைத்தும் ஆரோக்கியமான சண்டைகள் தான். 

 

அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பரான அவருடைய இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. ஒரு பெரிய சரித்திரப் படம் அல்லது டிவி சீரியல் பண்ண வேண்டும் என்பது அவருடைய ஆசை. சரித்திரக் கதைகள் கொண்ட புத்தகங்களை நானும் அவரும் விடாமல் படித்து விடுவோம். கலைஞரின் எழுத்தில் நாங்கள் ரோமாபுரி பாண்டியன் சீரியல் எடுத்தபோது அதில் தனக்கு ஒரு பாத்திரம் வழங்கியிருக்க வேண்டும் என்று சண்டையிட்டார். 

 

அவரால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். அவருக்கு இந்த அளவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது யாருக்கும் தெரியாது. விவேக் சாரை கொரோனா தடுப்பூசி செலுத்த அழைத்துச் சென்றது மனோபாலா தான். நானே என்னுடைய நண்பனை அழைத்துச் சென்று, அவனுடைய சாவுக்குக் காரணமாகிவிட்டேனே என்று பலமுறை அழுதிருக்கிறார். விவேக் சாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவின் பல கலைகளில் ஒரே நேரத்தில் இயங்கியவர். அவருடைய மறைவு சினிமா உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.

 


 

Next Story

“காமராஜருக்காக குரல் கொடுத்ததில் இருந்த சிரமம்” - டப்பிங் அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

 M.S.Bhaskar Interview

 

சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். தன்னுடைய திரையுலக அனுபவம் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

 

என்னுடைய சகோதரியும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். அதற்குப் பிறகு நானும் டப்பிங் பேசினேன். கொஞ்சம் கொஞ்சமாக திரையில் தோன்றினேன். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவில் நான் செய்த விஷயங்களில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என்னை நம்பி எனக்கு இயக்குநர்கள் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்கள் தான் என்னுடைய கேரக்டரை வடிவமைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கேரக்டரை நாம் உள்வாங்கி நடிக்கிறோம். சிவாஜி அப்பாவின் மிகப்பெரிய வெறியன் நான். கலைஞர் அப்பாவின் தமிழுக்கு நான் அடிமை.

 

என்னுடைய தகப்பனாரின் அறிவுரைகள் என்னை வழிநடத்துகின்றன. நாடகங்களில் நான் அதிகம் பங்கெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. என்னுடைய சகோதரிகள் நாடகங்களில் நடித்து வந்தனர். டிவி மற்றும் ரேடியோ நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். மேடை நாடகங்களில் நான் அதிகம் நடித்ததில்லை. சீரியல்களில் நான் நிறைய நடித்தேன். நடிப்பது போதும் என்கிற எண்ணம் இன்று வரை எனக்கு வந்ததில்லை. கமல் அண்ணா எல்லாம் இன்று வரை புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதுபோல் சினிமாவில் பலரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற சிந்தனையிலேயே இருப்பார்கள். 

 

நடிகர்களில் அனைவரையும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்தது சிவாஜி அப்பாவையும் கமல் அண்ணாவையும். ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, தங்கவேல் போன்ற பல நடிகர்களை எனக்கு பிடிக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு மிமிக்ரி திறமை கொஞ்சம் வேண்டும். யாருடைய கேரக்டருக்காக நாம் பேசுகிறோமோ, அவருடைய உருவத்திற்கு ஏற்ற குரலை நாம் வெளிப்படுத்த வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் மோர்கன் ஃபிரீமனுக்கு மூன்று வகைகளில் என்னால் டப்பிங் கொடுக்க முடிந்தது. இப்போதும் டப்பிங் செய்ய என்னை அழைத்தால் நான் செல்கிறேன்.

 

பிரம்மானந்தம் அவர்களுக்கு என்னுடைய குரல் நன்றாகப் பொருந்தும். 'மொழி' படத்தில் மட்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததால் நான் அவருக்கு டப்பிங் கொடுக்கவில்லை. காமராஜர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருக்கு நான் டப்பிங் கொடுத்தது சவாலான ஒன்றாக இருந்தது. அவர் நம்முடைய காலத்தில் வாழ்ந்தவர். அதனால் அவர் பேசிய பல ஒலிநாடாக்களைக் கேட்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நான் நன்றாக நடிக்கிறேன் என்றும், என்னைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும் ராதிகாவிடம் சொன்னது கலைஞர் அப்பா தான். 

 

அதன் பிறகு தான் தொடர்ந்து ஆறு வருடங்கள் வரும் வகையில் அந்த கேரக்டர் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தில், மாவட்டத்தில் வாழும் மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை நான் நன்கு கவனிப்பேன். அதனால் தான் சினிமாவில் பல வட்டார மொழிகளில் என்னால் பேச முடிகிறது.  எப்போதும் அனைவரோடும் ஜாலியாக இருக்க வேண்டும். கோபம் என்பது எனக்கு பெரும்பாலும் வராது. ஆனால் ரௌத்திரமும் பழக வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கவே நான் எப்போதும் விரும்புகிறேன்.