பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நேற்று முன்தினம் கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக நேற்று தன் சமூக வலைதள பக்கங்களில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பூ ட்விட்டரில், "நீங்கள் ஒரு போராளியாக இருக்கும்போது, என்ன நடந்தாலும், வெற்றி பெறுவீர்கள். சஞ்சய் தத், நீங்கள் இந்த யுத்தத்திலும் வெற்றிபெறுவீர்கள். ஒவ்வொரு முறையும் ஃபீனிக்ஸை போல எழுகிறீர்கள். அதைப்போலத்தான் இதுவும், எந்த வித்தியாசமும் இல்லை. விரைவில் குணமடைந்து பழையபடி வாருங்கள்" என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.