
சுந்தர்.சி இயக்கத்தில் கமல் மற்றும் மாதவன் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் 'அன்பே சிவம்'. இந்தப் படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்தப் படத்தைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா தொடர்பான தரவுகளையும், மக்களே மதிப்பிடும் பிரபல தளமான ஐ.எம்.டி.பி.-இல் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட தமிழ்ப் படமாக 'அன்பே சிவம்' உள்ளது. இந்தத் தகவலை கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்குப் பதிலளித்த குஷ்பு, “படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்தார்.
இதன்பின் இந்தப் பதிவில் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, “வின்னர் 2001-ஆம் ஆண்டு படமாக்கப்பட்டுத் தாமதமாக வெளியானது. 'அன்பே சிவம்' தோல்விக்குப் பின்னர் சொந்தமாக 'கிரி' படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. 'அன்பே சிவம்' 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், 'கிரி' 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் ரொம்ப அதிகம் பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி என நினைத்துகொண்டு முட்டாளாகத் தெரியுரீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.