Skip to main content

கலைஞரை நினைவுகூர்ந்து ஆசிரியர் தின வாழ்த்துச் சொன்ன குஷ்பு 

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 kushboo wishes happy teachers day

 

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2010 ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது வரை அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த குஷ்பு பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். மேலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த அவர், அண்மையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். 

 

செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தாங்கள் பயின்ற ஆசிரியர்களை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எப்போதுமே ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வரும் குஷ்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது அரசியல் ஆசானான முன்னாள் முதலமைச்சர் கலைஞரை நினைவுபடுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் பள்ளியில் எனது முதல் நாள். என் விருப்பமான ஆசிரியரை இனிய நினைவுகளுடன் நினைவு கூருகிறேன்” என்று கலைஞருடன் நின்று கொண்டிருக்கிற படத்தைப் பகிர்ந்துள்ளார். தீவிரமான பாஜக அரசியலில் இருந்து கொண்டு தொடர்ச்சியாக கலைஞரை நினைவுபடுத்தி பதிவிடுவதை குஷ்பு வழக்கமாகவும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

தற்கொலை, சாமியார், திருவிழா; சுந்தர்.சி-யின் அரண்மனை 4

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
sundar c aranmanai 4 trailer released

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.   ட்ரைலரை பார்க்கையில், சுந்தர்.சியின் தங்கையாக தமன்னா வருகிறார். அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்வது போலவும் அது தற்கொலை இல்லை என சுந்தர்.சிக்கு தோன்றுகிறது. தமன்னா மறைவிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அவரை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதை திகில் கலந்து காமெடியுடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் அரண்மனையின் முந்தைய படங்களில் வரும் திருவிழா, சாமியார், இரண்டு ஹீரோயின்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.