Skip to main content

“கரோனாவுக்கு மதம் கிடையாது, அந்த முட்டாள்களுக்கு எப்போ இது புரியபோது”- குஷ்பு சாடல்

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கும் மேல் பரவி, உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
 

kushboo


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர் மற்றும் 35 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மத வழிபாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் தாங்களே முன்வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுகொண்டுள்ளது. 

இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள்தான் கரோனாவை பரப்புகின்றனர் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டரில், “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சில முட்டாள்கள் கோவிட்-19 வைரஸை ஒரு சமூகப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள். இந்த வைரஸுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக் கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்கவும். எல்லா மதக் கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.