Skip to main content

''ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும்'' - குஷ்பு அறிவிப்பு!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

bhs


தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காகத் தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டெப்ஸ் தலைவர் சுஜாதா விஜயகுமார் பேசியபோது...
 


''கடந்த இரண்டு மாதங்களாகப் படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் நிறைய அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். படப்பிடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுடன் நாங்கள் நேற்று ஜூம் செயலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினோம். முன்னதாக, நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான நடிகை குஷ்பூ சுந்தர் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுவைச் சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம் அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்று உறுதியளித்தார். ஷூட்டிங் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாகக் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தகவல் மற்றும் விளம்பர அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

மேலும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளர் குஷ்பு சுந்தர் இது குறித்து பேசியபோது... ''முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறோம். கடந்த 70 நாட்களாகப் படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நிலைமையைப் பார்த்து, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் கடம்பூர் ராஜுவை அணுகினோம். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு வரமாக வந்துள்ளது. ஜூம் செயலி மூலம் அனைத்து விஷயங்களையும் பல்வேறு சேனல்களில் தொலைக்காட்சி சீரியல்களைத் தயாரிப்பவர்களுடன் விவாதித்தோம். எப்போது படப்பிடிப்பு தொடங்குவது என்பது குறித்து நாங்கள் விரைவில் முடிவெடுப்போம். அரசாங்கம் வகுத்துள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். மிக விரைவில், நாங்கள் வேலையைத் தொடங்குவோம். ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும்'' எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.