Skip to main content

‘இயக்குநராக அவதாரம்’ - வில்லன் நடிகர் சரண்ராஜ் திரை அனுபவம்!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Kuppan Movie | Exclusive Interview |  Charanraj 

 

வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்த சரண்ராஜ், ‘குப்பன்’ படம் மூலமாக இயக்குநராகிறார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக அவரைச் சந்தித்த போது பல்வேறு  விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

 

எனக்கு ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நேராக குப்பத்துக்கு சென்றுவிடுவது வழக்கம். அங்கு குப்பன் என்கிற ஒருவர் இருக்கிறார். நீண்டகாலமாக அவர் எனக்கு பழக்கம். ‘குப்பத்தின் வாழ்க்கை முறை குறித்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்’ என்று ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். அப்போதிருந்தே அந்த எண்ணம் எனக்குள் தோன்றியது. நிறைய யோசித்தேன். இது கஷ்டமான விஷயம் என்பதும் எனக்கு புரியாமல் இல்லை. அப்போது மனதில் உருவானது தான் 'குப்பன்' படத்தின் கதைக்கரு. குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மார்வாடி பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் படத்தின் கதை. 

 

அதன் பிறகு நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. நாங்கள் நினைத்தது போல் நடிகர்கள் எங்களுக்கு கிடைத்தனர். படத்தை இயக்க வேண்டும் என்கிற டென்ஷன் இருந்தது. ஆனால் நடிகர்கள் அனைவரும் மிகவும் நன்றாக நடித்தனர். நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். சிறுவயதில் இருந்தே வீட்டில் நான் செல்லப்பிள்ளை. பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ‘நான் ஹீரோ மாதிரி இருக்கிறேன்’ என்று நண்பர்கள் சொன்னார்கள். சில அவமானங்களும் நேர்ந்தன. அதனால்தான் நடிகனாக வேண்டும் என்று முடிவு செய்தேன். 

 

ரஜினி சாரோடு நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். அவரோடு நிறைய பழகியிருக்கிறேன். இன்றைய தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு அண்ணனாக, சீனியராக எனக்கு அவர் நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவற்றை நான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். 'ஜெயிலர்' படம் பார்த்தேன். அவருடைய வேகம் இப்போதும் அப்படியே இருக்கிறது. எப்போதும் சூப்பர் ஸ்டார் அவர்தான். அவர் போல் யாராலும் வாழ முடியாது. 

 

குப்பன் படத்தை இயக்கும்போது நடிகர்களை தினமும் ஊக்குவித்து வேலை வாங்கினேன். இப்போது வந்திருக்கும் இளம் இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது. ஒரே மாதிரி கேரக்டர்களாக வந்ததால் தமிழில் நிறைய படங்களை நான் மிஸ் செய்திருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' படத்தில் முக்கியமான ஒரு ரோல் செய்திருக்கிறேன். அருண்ராஜா காமராஜ் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. நம்முடைய கேரக்டரை நாம் விரும்ப வேண்டும். அதுதான் முக்கியம். கதை தான் எப்போதுமே ஹீரோ.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.