Skip to main content

'வரலாறு 2', 'வில்லன் 2' வருமானு கேட்குறாங்க, ஆனால் நான் யோசிச்சிருக்கது... கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

ks ravikumar

 

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணனுக்கு வழங்கியுள்ளார்.

 

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கவுள்ளார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அவை பின்வருமாறு...

 

‘கூகுள் குட்டப்பன்’ படம் குறித்துப் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "என்னுடைய தயாரிப்புல வெளியான முதல் படம் 'தெனாலி'. 1999-ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு 2000-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு தொடர்ந்து படம் இயக்கிக் கொண்டிருந்ததாலும் நிறைய படங்களில் நடித்து வருவதாலும் தயாரிப்பில் கவனம் செலுத்த நேரமில்லை. என்னிடம் பத்து வருடங்களாக உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி வரும் சபரி, சரவணனுக்காகத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். மலையாளப் படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டும்; நாங்கள் அந்தப் படத்தை இயக்கப் போகிறோம் என்றுதான் முதலில் வந்தார்கள். அவர்கள் முதலில் பேசி வைத்திருந்த தயாரிப்பாளரால் திட்டமிட்ட தேதியில் படம் பண்ண முடியவில்லை. படம் இயக்க வேண்டும் என இவர்கள் எடுத்த முயற்சி வீண் போகக்கூடாது என நினைத்து, நானே தயாரிக்கிறேன் என்றேன். மீண்டும் இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்" என்றார்.

 

தெனாலி உள்ளிட்ட தன்னுடைய பிற கடந்த கால படங்கள் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், " 'தெனாலி 2', 'பஞ்சதந்திரம் 2', 'படையப்பா 2', 'வரலாறு 2' பற்றியெல்லாம் பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கமல் சாரிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அந்தக் கதைக்குத் தயாரிப்பாளரும் இருக்கிறார். ஆனால், கமல் சார் எப்ப அந்தப்படம் பண்ணனும்னு நினைப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் கதைக்கு 'பஞ்சதந்திரம் 2' எனப் பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். இதுவரை நான் நினைத்தது பஞ்சதந்திரம் 2 பற்றி மட்டும்தான். 'வரலாறு 2', 'வில்லன் 2' படம் வரப்போகுதாமே என என்னிடமே பலர் கேட்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் யோசித்தது இல்லை. பொதுவாக, இரண்டாம் பாகம் உருவாக்குவதில் எனக்குப் பெரிய அளவில் ஆர்வம் கிடையாது. நாம் எவ்வளவு நன்றாகப் படம் இயக்கினாலும், முந்தைய படத்தோடு ஒப்பிடுவார்கள். அது, நம் படத்தைச் சுமாரான படமாக்கிவிடும். ஒரு சில படங்கள் மட்டுமே ஒப்பீட்டைத் தாண்டி நன்றாகப் பேசப்பட்டுள்ளது. அஜித் நடித்த 'பில்லா' படத்தை அதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதோ ரஜினியின் ஃபிளாஷ்பேக்' - சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

rajini muththu re release update

 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. 

 

இந்த நிலையில் இப்படம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸாகவுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது மேலும் டிசம்பரில் வெளியாகவுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளது. டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதோடு ரீ ரிலீஸ் தொடர்பான வீடியோ ஒன்றைப் படக்குழு பகிர்ந்துள்ளது. அதில் 'எல்லோரும் ஃபிளாஷ்பேக் பற்றி பேசுகிறார்கள். இதோ ரஜினியின் ஃபிளாஷ்பேக்' எனக் குறிப்பிட்டு முத்து பட காட்சிகளைக் குறிப்பிட்டுள்ளனர். சமீபமாக ஃபிளாஷ்பேக் தொடர்பான பேச்சு ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் லியோ பட ரிலீஸுக்கு பின்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில், படத்தில் வரும் விஜய்யின் ஃபிளாஷ்பேக் பொய்யாக கூட இருக்கலாம் எனச் சொல்லியிருந்தார். அதன் பிறகு பலரும் ஃபிளாஷ்பேக்கில் வரும் படங்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர். அது ட்ரெண்டாகி வந்த நிலையில், அந்த ட்ரெண்டிற்கு ஏற்ப திடீரென்று சர்ப்ரைஸாக முத்து படக்குழுவும் ரீ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

"திருமாவளவன் பார்த்துள்ளதால் இப்படம் நியாயத்தை பேசும்..." - கே.எஸ்.ரவிக்குமார்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

ks ravikumar Speech Pudhu Vetham Audio Launch

 

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரிப்பில் 'காக்கா முட்டை' சிறுவர்கள்‌ விக்னேஷ்‌, ரமேஷ்‌, வருணிகா, சஞ்சனா, இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'புது வேதம்'. மேலும் 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ ஒரு முக்கிய வேடத்தில்‌ நடித்துள்ளார். ராசா விக்ரம்‌ இயக்கியுள்ள இப்படத்திற்கு ரபி தேவேந்திரன்‌ இசையமைத்துள்ளார். விரைவில்‌ இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு திருமாவளவன் எம்.பியும் கலந்துகொண்டு பேசினார். 

 

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், "இந்த விழாவுக்கு நெல்லை சுந்தர்ராஜன் செய்த தொல்லையால்தான் வந்தேன். இங்கு வந்தது நல்லாதாகிவிட்டது. எனது பழைய நண்பர்கள், இயக்குநர் வி.சேகர் போன்றவர்களை சந்திக்க முடிந்தது. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது  படத்துக்கு இசையமைத்தவர் தேவேந்திரன். இன்றைக்கு அவரது மகன் புது வேதம் படத்தில் பாடல் இசையமைத்திருக்கிறார். திருமாவளவன் இந்த படத்தை பார்த்திருக்கிறார் என்றால் அடித்தட்டு மக்களுக்கான நியாயத்தை பேசும் படமாகத்தான் இது  இருக்கும் என்று கருதுகிறேன். இப்படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்" என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், "புது வேதம் படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டுக் காட்டினார். முழுமையாகப் பார்த்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும்போது, ‘எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று படம் எடுக்கிறார்கள்’ என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இந்த திரையுலகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடன் படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

 

ராசா விக்ரம் போன்று சாதி வேண்டாம், மதம் வேண்டாம், எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிப்போம் என புரட்சிகரமான முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது; ஆறுதல் அளிக்கிறது. இந்த இயக்குநரின் பார்வை இடதுசாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக; சமத்துவப் பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது.

 

ஒருபுறம் சாதிப்பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்  ஊற்றுகிறவர்களாக இருந்தாலும் ஐயன் திருவள்ளுவர், அவ்வைப்பிராட்டி, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம். மனித குலத்தை தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் தனிப்பெருங்கருணை என்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு என்ற ஆன்ம நேயத்தைப் போதித்தவர் வள்ளலார்.

 

காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும். திரைத்துறையில் எத்தனை சாதிவெறியர்கள் வந்தாலும் மதவெறியர்கள் வந்தாலும் எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை இந்த சமூகம் தந்துகொண்டே இருக்கும். அந்த காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்த காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார், அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்" என்றார்.