KS Ravikumar

சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான கே.எஸ்.ரவிக்குமாரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் ‘கூகுள் குட்டப்பா’ படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

முதலில் இந்தப் படத்தில் நடிக்க மட்டும்தான் என்னுடைய உதவி இயக்குநர்கள் என்னை அணுகினார்கள். படத்தை பார்த்ததும் படமும் பிடித்திருந்தது; அந்தக் கதாபாத்திரமும் பிடித்திருந்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். ஆனால், அந்தத் தயாரிப்பாளரால் திட்டமிட்டபடி படத்தை எடுக்க முடியவில்லை. நம்முடைய உதவி இயக்குநர்கள் மனசு கஷ்டப்படுகிறதே என்று நினைத்து படத்தை நானே தயாரிக்கிறேன் என்றேன். பட இயக்கத்தில் பிஸியாக இருந்ததால் தெனாலி படத்திற்கு பிறகு எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்தேன். இந்தப் படத்திற்கு நல்லபடியாக வரவேற்பு இருந்தால் என்னுடைய பிற உதவி இயக்குநர்களையும் இயக்குநராக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

Advertisment

மலையாள படத்தில் ஜாப்பானிஷ் பெண்ணை நடிக்க வைத்திருப்பார்கள். ஹீரோ வெளிநாட்டில் வேலை பார்ப்பார். அங்கிருக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வரும். ஏன் பாரின் பொண்ணு என்றால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்றுதான் இருக்க வேண்டுமா, ஸ்ரீலங்காகவாக இருக்கக்கூடாது என்று நினைத்து அந்தக் கதாபாத்திரத்தை இலங்கை பெண்ணாக காட்டியிருப்போம். லாஸ்லியா ஸ்ரீலங்கா என்பதால் அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். படத்தின் முதல்காட்சியில் தர்ஷனுடன் நடித்தபோதே படம் நன்றாக வரும் என்பது தெரிந்துவிட்டது.