'தரமணி' படத்திற்கு இயக்குனர் ராம் தற்போது 'பேரன்பு' படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி - அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் இளம் நடிகை சாதனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்ற இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் படத்தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் குறித்து பேசியபோது... "தயாரிப்பாளர் தேனப்பன் இதுவரை எடுத்தது எல்லாம் ஒரு படமே இல்லை. இது தான் படம். இதன் ஒரிஜினல் டிவிடியை வாங்கி பொக்கிஷமாக எல்லோரும் வீட்டில் வைத்திருக்க வேண்டும்" என்றார். இதற்கடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மிஷ்கின் குறிப்பிட்டதை குறித்து பேசியபோது... "தேனப்பன் 'பஞ்சதந்திரம்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார். அதுவும் பலரின் வீட்டில் உள்ள ஒரு படம் தான். கமர்ஷியல் படங்கள் இருந்தால் தான் கலை படங்களையும் பிரித்து பார்க்க முடியும். வெறும் கலைப்படம் மட்டுமே ஒரு சினிமாவை வாழ வைக்க முடியாது. கமர்ஷியல் படங்களும் வேண்டும், அதற்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது" என கருத்து மோதலுக்கு பதிலடி கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணில் கால்வைக்க விரும்பாத தாவரம் ஒன்று உனது வீட்டுச் சுவரில் வளர்கிறது அது பூப்பதும் இல்லை காய்ப்பதும் இல்லை ஆனால் வளர்கிறது வளரும் அதன் சுகத்துக்காக...
– கவிஞர் ஞானக்கூத்தன்
நோய் வாய்ப்பட்ட மனைவியை குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு ஓடிப்போகுற ஆண்களைப் பார்த்த சமூகத்திற்கு, வாய்ப்புக் கிடைத்தால் மூளை முடக்குவாதத்தால் பாதித்த பெண் குழந்தையை கூட விட்டுவிட்டு, இல்லை இல்லை கொன்றுவிட்டுக்கூட வேறொரு ஆணோடு ஓடிபோகக்கூடியவர்கள்தான் பெண்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக ‘பேரன்பு’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம்.
உணர்வுகளில் ஆண் பெண் திருநங்கை என்ற பேதமெல்லாம் இங்கு எப்போதும் இருந்ததில்லை, அதேநேரம் தேவதை, புனிதா என நாம் தங்கமுலாம் பூசி வைத்திருக்கும் பெண்கள் பற்றிய கற்பிதங்களை, ஜி. நாகராஜன் பார்வையில் ‘மனிதர்கள் என்பவர்கள் மகத்தான சல்லிப்பையல்கள்’ என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார்.
கூலிப்படையை வைத்து கணவனைக் கொன்றுவிட்டு பிடித்த ஆணோடு வாழ்க்கையைத் தொடரும் பெண்கள் நிறைந்த நம் தெருக்களில், ஊர்களில், நகரங்களில் அதே கணவனுக்காக இன்னோர் ஆணுடன் நெருங்கி பழகி கல்யாணம் முடித்து காரியத்தை சாதிக்கும் பெண்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
என்மகள் சோறு சாப்பிடாமல் பட்டினியாக கிடந்து படிப்பில் கவனம் செலுத்தியே துவண்டு போகிறாள்; ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் பெற்றும் அவள் விரும்பிய படிப்பில் சேர வாய்ப்பு கிட்டவில்லை என்று சாகத்துணிகிறாள் என்று வெத்து பெருமை பேசும் நாம், அவள் உடலுறவுகொள்ள ஆசைப்பட்டு ஒரு ஆணை காதலித்தால் மட்டும் சாதிமதம் பார்த்து கொன்று விடுகிறோம். இங்கு எல்லாருக்குமே தேவைகள் இருக்கிறதென்பதை பொதுபுத்தியில் தொடர்ந்து மறைத்து வருகிறோம்.
குறிப்பிட்ட நாளில் பொது இடங்களில் ஆண் நண்பனோடு பேசிக்கொண்டிருக்கும் பெண்களை மானப்பங்கம் செய்து தாலிக்கட்ட வைத்து ஒழுக்கச்சீலர்களாக காட்டிக்கொள்ளும் நம் அருகாமையில்தான், பைத்தியமாக தெருவில் சுற்றும் பெண் திடீரென புள்ளத்தாச்சியாக காணக்கிடைக்கிறாள்.
எத்தனையோ அம்மாக்கள் அல்லது பெண்கள் இந்த மாநகரத்தில் பேருந்துகளில், தெருக்களில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்துக்கொண்டுப் போவதைப் பார்த்து கசிந்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அப்படியாப்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டுப் போன எந்தவொரு ஆணையும் இதுவரை பார்த்ததேயில்லை. அவர்களுக்கும் உடலுறவு மீது நாட்டம் இருக்கும் என்பதை ஒரு பெண் குழந்தையை முன்வைத்து நம்மோடு உறவாடியிருக்கும் இயக்குநர் ராம் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டவர்களாக இருக்கிறோம்.
தன் மகளுக்காக மம்மூட்டி அவர்கள் ஒரு ஆண் விபச்சாரனைத் தேடி ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண் ‘நாங்க வயசான, முடியாத ஆண்கள் யாராக்காவது உதவி தேவைபடும் போது மட்டும் போவோம், ஆனால் அதேபோன்று தேவைபடும் பெண்களுக்கு இங்கே எந்த ஆணும் இல்லை’ என்கிறார். பெண்களுக்குதான் எவ்வளவு கொடூரமான தண்டனை.
நாளை இதுபோன்றொரு குறைபாட்டோடு பிறக்கும் ஒரு குழந்தைக்கு, அதன் உடல் தேவைக்கு நம்மிடையே இருக்கும் உபகரணம் என்னவென்பதை, அதுபோன்றவர்களை பேணிக்காத்தவர்களிடையே ஒரு ஆய்வை நடத்தி பொது சமூகத்திற்கு அளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.
கன்னிக்கழியாமல் செத்துப்போன உயர் ரக சாதியில் பிறந்த பெண் பிணங்களுக்கு கீழ்நிலை சாதியாக சொல்கிற உயிருள்ள ஆண்களால் உடலுறவு கொள்ள வைத்து கன்னிக்கழித்து அடக்கம் செய்தவர்கள். என்ற வரலாற்றில் வந்த நமக்கு இதற்கு தீர்வை தேடுவதில் சிரமமேதும் இருக்காதென்றே நம்புகிறேன்.
ஒரு சராசரியான பெண் தன்னோட உடல் தேவைக்கு எந்த நேரத்திலும் ஒரு ஆணை தேர்ந்தெடுத்து இயங்க முடியும். அதேநேரம் மூளை வளர்ச்சிக்குன்றிய ஒரு பெண்ணால் அது முடியுமா. இத்திரைப்படத்தில் ‘பாப்பா’வின் அம்மா ஒரு சராசரி பெண். பாப்பா மூளை வளர்ச்சிக்குன்றிய ஒரு பெண். அம்மா இன்னோர் ஆணுடன் சென்று உடலுறவு கொண்டு ஒரு குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். பாப்பா தன்னோட உடல் தேவைக்கு டீவியில் வரும் நடிகர் சூர்யாவின் நிழலுருவைப் பார்த்து முத்தம் கொடுக்கிறாள். அது மட்டும் போதுமானதாக இருக்குமா என்பதை நமது மனசாட்சியிடம் விட்டுவிடுவோம்.
அ.முத்துலிங்கம் ஒரு கதையில், வெட்டவெளியென்று வேகமாக பறந்து வந்த ஒரு பறவை ஜன்னல் கதவிலிருக்கும் கண்ணாடியில் மோதிகொண்டு வீழ்ந்து சாவதைப் பற்றி எழுதியிருப்பார். அதேபோன்று இத்திரைப்படத்திலும் ஒரு பறவை கண்ணாடிக்கு அப்பால் தெரியும் வெளியை நோக்கி பறந்து பறந்து கண்ணாடியில் முட்டிக்கொண்டு வெளியேறத்தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கும்.. அதே நிலைமைதான் இங்கு நமக்கும். வெட்டவெளி எது கண்ணாடி எதுவென்பதை கண்ணுள்ளவர்கள் கண்ணில்லாதவர்களுக்கு சொல்லவேண்டிய கடமை இருக்கிறது.
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சராசரியான மனிதர்களைப் போன்று ஒழுக்கநீதி கல்லாதவர்கள். யாரும் பார்க்காதவாறுதான் சுய இன்பம் செய்யனும். மறைவாகத்தான் ஆண் பெண் கூடனும் என்பதை அறியாதவர்கள் என்று இன்னும் தெளிவுறக்கூறியிருக்கலாம்.
மம்மூட்டி அவர்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மகத்தான மனிதராக மிளிர்கிறார். மூளை முடக்குவாதம் ஏற்பட்ட பெண்ணாக நடித்த சாதனாவிற்கு எதிர்காலம் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும்.