Skip to main content

“கனவாகவே போய்விட்டது” - ரஜினி படம் குறித்து மனம் திறந்த கே.எஸ் ரவிக்குமார்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
ks ravikumar about ranaa movie dropped

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் ‘ஹிட்லிஸ்ட்’. சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் என இருவர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர். 

இதில் கே.எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து தொடங்கப்பட்டு பின்பு கைவிடப்பட்ட ராணா படம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில், “அந்தப் படம் கனவாகவே போய்விட்டது. தசாவதாரத்திற்கு அடுத்ததாக ராணா படம் இருக்க வேண்டும் என நானும் எந்திரனுக்கு அடுத்ததாக இந்தப் படம் இருக்க வேண்டும் என ரஜினி சாரும் பேசினோம். ஆரம்பத்தில் அனிமேஷனாக எடுக்க திட்டமிட்டோம். அப்புறம் படத்தில் சில லைவ் போர்ஷனுக்காக சில சீன்கள் எழுதினேன். அதை கேட்ட ரஜினி சார், இதுவே நல்லாயிருக்கு, அனிமேஷன் வேண்டாம் லைவ் ஷூட்டிங்கே போலாம் எனச் சொன்னார். படத்திற்காக ப்ரீ புரடக்‌ஷன் வேலைகளெல்லாம் ஆரம்பித்து பூஜை போட்டோம். உடனே தீபிகா படுகோனேவை வைத்து ஒரு பாடலையும் எடுத்துவிட்டோம். அந்தச் சமயத்தில்தான் ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அந்த இடைவெளியில் டெக்னீஷியன்கள் எல்லாம் போய்விட்டனர். ஆனால் நான் அப்படியேதான் இருந்தேன். நானும் படத்தை விட்டு போயிருந்தால், கேவலமாக பேசியிருப்பார்கள். 

அப்போது உண்மையாகவே ஒரு விஜய் படம் வந்தது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வந்தது. அதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு ரஜினிக்கு காத்திருந்தேன். சிங்கப்பூரிலிருந்து ரஜினி வந்ததும், ஒரு வருஷத்துக்கு ரஜினி மெனக்கெட கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். அதனால் மெனக்கெடல் இல்லாமல், திரும்பி அனிமேஷனுக்கே போய்விடலாம் என முடிவெடுத்தோம். எனக்கு அனிமேஷன் தெரியாது. அப்போது ராணாவுக்கு முன் கதை இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து எழுதின கதைதான் கோச்சடையான். ராணாவுக்கு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து கோச்சடையான் எழுதினோம். ரஜினியிடம் கதை சொன்ன போது சில மாற்றங்கள் சொன்னார். பின்பு லண்டனில் ஸ்டூடியோவுக்குள் ஷூட் பண்ணோம். எனக்கு அனிமேஷன் தெரியாது என்பதால், அனிமேஷனுக்கு படிச்ச சௌந்தர்யா பண்ணட்டும் என்றேன். அதுவும் நடந்தது. அதனால் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் எழுதினேன். ஆனால் இன்னமும் ராணா கதை, முதல் பாதி, இரண்டாம் பாதி அடங்கிய மொத்த  ஸ்கிரிப்ட் என்னுடைய அலுவலகத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம். ரஜினி, அஜித் போல இமேஜ் கொண்ட ஹீரோதான் அதற்கு பொருத்தமாக இருக்கும். விஜய் இனிமேல் படம் பண்ணுவாரென தெரியவில்லை. அதனால் பெரிய இமேஜ் கொண்ட ஹீரோ நடித்தால்தான் எடுபடும்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலகிருஷ்ணா

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
balakrishna to act in jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள்” - ரஜினிகாந்த்

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
rajinikantha wishes chandrababu naidu

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்திருக்கும் தி.மு.க. கூட்டணித் தலைவர், என்னுடைய அருமை நண்பர் ஸ்டாலினுக்கு எனது பாராட்டுக்கள். அதே போல எனது நண்பர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் அவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும். மத்தியில் என்.டி.ஏ கூட்டணி மூணாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மோடியும் மூணாவது முறை பிரதமராக பதவி ஏற்க போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்” என்றார். மேலும் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு, “வருஷா வருஷம் போய்ட்டு வரும் இடம்தான். ஆனால் ஒவ்வொரு வாட்டியும் புதுப்புது அனுபவத்தை தரும்” என்றார்.  

ரஜினிகாந்த் கடந்த மாதம் 29ஆம் தேதி இமயமலை பயணம் மேற்கொண்டார். தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், இம்முறையும் கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்றார்.