பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
இத்தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பா.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும், அவர்களது கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர். இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாவது ட்ரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரைலருக்கான சிறிய ப்ரோமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வீரப்பன், “நேரா பேசுறதுக்கு எனக்கு வாய்ப்பு கொடுத்து வைக்கல கடவுளு... நான் என்னா செய்யட்டும். வீடியோலத்தான் பேசுறேன். எல்லாருமே பார்ப்பீங்க” என பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.