Koose Munisamy Veerappan 2nd Trailer released

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

Advertisment

இத்தொடரின் ட்ரைலர் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதை சூர்யா அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் பலரது கவனத்தை பெற்றது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதை சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரைலரில், நக்கீரன் ஆசிரியர், “காவிரி பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் நடந்துகிட்டது வீரப்பன் தான்... அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கிடையாது” என்கிறார். மேலும் வீரப்பன், “நான் வந்து பயங்ரவாதி அல்ல...அதாவது நியாயத்தை நிலைநாட்டுறேன்...அவ்வளவு தான்”, “இந்த மாதிரி கோழைவேலை செய்ய கூடாது அரசாங்கம்” என பேசும் ஒரிஜினல் வீடியோ இடம்பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment