இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரம்ஜான் தினத்தையொட்டி வெளியிட முடிவெடுத்த படக்குழு, அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது. பின், நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது.
தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கொலைகாரன் திரைப்படம் கடைசியாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த படம் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.