Skip to main content

சீமராஜா சூப், மணி சார் ஜூஸ்...? ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் வரிசையில் பிரபலமாகும் கோடாங்கி!    

Published on 18/03/2019 | Edited on 19/03/2019

இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட தொழிலாளர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை அடங்கியது தமிழ் சினிமா உலகம். அந்த உலகத்தில் சமீபத்திய அங்கமாக உருவாகியிருப்பவர்கள் யூ-ட்யூப் ரிவ்யூவர்கள். ஜியோ புரட்சியில் யூ-ட்யூப் பட்டிதொட்டி எங்கும் நன்கு ஃபேமஸான பின்னர், தமிழில் பல திரை விமர்சகர்கள் உருவாகி உள்ளனர். படத்தை பார்த்த பின்னர், அந்த அனுபவத்தை வீடியோவாக எடுத்து பலர் பகிர்கிறார்கள். இதையே தங்கள் தொழிலாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த யூ-ட்யூப் ரிவ்யூவர்களில் இரண்டு வகை. ஏதேனும் ஒரு ஊடக நிறுவனம் சார்ந்து, அந்த நிறுவனம் நடத்தும் யூ-ட்யூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் சிலர். தனி மனிதராக சேனல் தொடங்கி, ரிவ்யூ மட்டுமே செய்து ஒரு பிரபலமாக வளர்ந்தவர்கள் சிலர். தனிமனிதராக யூ-ட்யூப் சேனல் தொடங்கி ரிவ்யூ செய்வதில் முன்னோடியாக இருப்பவர்கள் ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் இருவரும்தான். 
 

kodangi


ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் இளமாறன், தனது மதுரை வழக்கு மொழியால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தவர். யாராக இருந்தாலும் தைரியமாக விமர்சிப்பவர், எந்தப் படத்தையும் நட்சத்திரங்களுக்காகப் பார்க்காமல் தரத்துக்காகப் பார்த்து பாராட்டவோ திட்டவோ செய்பவர் என்னும் பெயரை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் இது எல்லை மீறி அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தை கடுமையாக விமர்சித்தார். படத்தை விமர்சிப்பதைத் தாண்டி அஜித்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். கடுப்பான அஜித் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் இவரை திட்டியே ஃபேமஸாக்கினர். விவேகம் விமர்சன வீடியோவின் பார்வை எண்ணிக்கை, மில்லியன்களைத் தாண்டிச் சென்றது. இந்த ஸ்டைலை மெர்சல், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களிலும் இவர் தொடர, இதை தன் யுக்தியாகப் பயன்படுத்துகிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மாஸ் ஹீரோக்களான ரஜினி, அஜித், விஜய், இயக்குனர்கள் மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை எல்லாம் இவர் வேண்டுமென்றே விமர்சனம் என்ற பேரில் தாக்குவதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' தொடங்கி சமீபத்தில் 'சார்லி சாப்ளின் 2' வரை இவருக்கும் தமிழ் சினிமாவுக்குமான பஞ்சாயத்து இன்னொரு பக்கம் தொடர்கிறது. இதில் முரண் என்னவென்றால் இவரும் திரையுலகைச் சேர்ந்தவரே. உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் முன்பு சொல்லிவந்தார். 'தவம்' படத்தில் குதிரையில் வரும் வடிவேலுக்காக மக்கள் காத்திருப்பது போல இவரது படத்துக்காக பலர் காத்திருக்கின்றனர். 
 

'இட்ஸ் பிரசாந்த்' என்ற தனது ட்விட்டர் ஐடி மூலம் அறியப்படும் பிரசாந்தை அவரது ரசிகர்கள் செல்லமாக 'பாண்டா' என்று கூப்பிடுவார்கள். தற்போது 2K கிட்ஸால் இரண்டாம் வெளியீட்டில் கொண்டாடப்படும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை, படம் வெளியானபோதே கொண்டாடி ரிவ்யூ போட்டவர் இவர். அப்போது தொடங்கிய இவரது ரிவ்யூ பயணம் இன்று இவருக்கு திரையுலகில் பல நண்பர்களைப் பெற்றுத்தந்து இவரை பிரபலமானவராக்கியுள்ளது. ப்ளூ சட்டை மாறனை போன்று கடுமையாக விமர்சிக்காமல் இவர் தனிபாணியாக படங்களை விமர்சிப்பார். இடையில் சில ஆண்டுகள், இவர் எல்லா படங்களையும் பாராட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களிடையே இருந்தது. தற்போது, இவர் தனது வீடியோக்களில் விளம்பரங்களை சேர்க்கும் முறை அவ்வப்போது சர்ச்சையாகப் பேசப்படுகிறது.   

 

maran prashanth



இவர்கள் வழியில், இவர்களுக்கு அடுத்தபடியாக தனி மனிதனாக யூ-ட்யூப் சேனல் தொடங்கி நடத்தும் கூட்டத்தில் கவனமீர்ப்பவர் ஒருவர், சமீபத்தில் வைரலாகி வருகிறார். கோடாங்கி என்று அழைக்கப்படும் வடிவேல் முருகன்தான் அவர். 'V Studios' என்ற தனது சேனல் மூலம் திரைப்படங்களை ரிவ்யூ செய்கிறார். ரிவ்யூ செய்பவர்களின் கூட்டம் அதிகரித்த பின்னர், யார் முதலில் ரிவ்யூ வெளியிடுவது என்னும் போட்டி உச்சத்தில் இருக்கிறது. படம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்கு வந்து அவசரமாக ரிவ்யூ வெளியிட்டனர் சிலர். அவர்களை முந்த, திரையரங்கு வாசலிலேயே விமர்சன வீடியோ உருவாக்கினர் சிலர். தற்போது படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இடைவேளையில் திரையரங்கு ஓய்வறை அருகில் நின்று பரபரப்பாக விமர்சனம் செய்கின்றனர் சிலர். ஆனால், கோடங்கியோ ஒரு நாள் கழித்து மிகப் பொறுமையாக ரிவ்யூ போடுவார். இவரின் நையாண்டி பேச்சு, நையாண்டித்தனம்தான் இவரது ஹைலைட்டே. பிறரது ரிவ்யூ படம் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவு செய்ய என்றால், இவரது ரிவ்யூ படம் பார்க்காதவர்கள், பார்த்தவர்கள் என்று அனைவரும் ரசிப்பதற்காக.  உங்களுக்குப்  பிடித்த நடிகரை கோடாங்கி கலாய்த்தால், அதனால் வெறுப்படையாமல் ரசித்து சிரிப்பீர்கள். அப்படியிருக்கும் இவரது வஞ்சப்புகழ்ச்சி. 

பொதுவாக யூ-ட்யூப் ரிவியூ செய்பவர்கள் சென்னையில் இருந்து செயல்பட இவரோ திருப்பூரில் இருந்துகொண்டு வைரலாகி வருகிறார். தொடக்கத்தில் இவருடைய வீடியோக்கள் சில ஆயிரம் பார்வைகளையே தொட்டன. 'சீமராஜா' சூப்பில் தொடங்கியது இவரது வெற்றிப்பாதை. தொடர்ந்து மணி சார் ஜூஸ் கடை, சாமி ஸ்கொயர் கதை விவாதம், சர்கார் பாண்ட் பேப்பர் என்று இவர் படங்களை கலாய்க்கும் தொனியில் ரிவ்யூ வீடியோக்கள் செம வைரலாயின. இந்த வீடியோக்களுக்குப் பின்னர் இவருடைய பழைய ரிவ்யூக்களும் வியூஸ் ஏறத் தொடங்கியுள்ளன. படம் மோசமாக இருந்தால், கடுமையாக சாடாமல், விமர்சிக்காமல் அதை நையாண்டியாக வஞ்சப்புகழ்ச்சியோடு இவர் சொல்வது பெரும் பொழுதுபோக்காக இருக்கும். இவரது பார்வையில் 'நல்ல படம் என்பது வெகுஜனத்தை மகிழ்விப்பது' என்று கூறுகிறார். பெரும்பாலான இயக்குனர்கள் செங்கல்பட்டைத் தாண்டி யோசிப்பதில்லை என்று வருத்தப்படுகிறார். இவர் மீதுள்ள எதிர்மறை விமர்சனம், இவர் நாயகிகளை கொச்சையாகவும் இரட்டை அர்த்தத்துடனும் கிண்டல் செய்கிறார் என்பதே.  

திரைப்பட விமர்சனம் என்பது ஒரு மிகப்பெரிய கலை, அதற்கென தனி படிப்புகள் இருக்கின்றன. திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில் விமர்சகர்களுக்கும் திரைப்படம் குறித்த புத்தகங்களை எழுதியவர்களுக்கும் தனி பிரிவு இருக்கிறது. அவையெல்லாம் திரைப்பட ரசனை, அறிவு, திரைப்பட உருவாக்கத்தின் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் நிறைந்த வேலை. அப்படி விமர்சனம் செய்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால், சாதாரண ரசிகனின் மனநிலையில் பேசி அவர்களை விட புகழ் பெற்று வருகிறார்கள் இவர்கள். மக்களே ஊடகமாகி வரும் காலகட்டத்தில் எந்த மாற்றமும் தவிர்க்கமுடியாததே.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!