Skip to main content

"நாட்டுப்புற பாடல்னா அசிங்கமா நினைப்பாங்க..." பாடகி கிடாக்குழி மாரியம்மாள் உருக்கம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

mariyammal

 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம், ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் குரலில் வெளியான இப்பாடல், யூ-டியூப்பில் வைரல் ஹிட் அடித்துள்ளது. பலரும் தன்னையறியாமல் இப்பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வேளையில், பாடகி கிடாக்குழி மாரியம்மாளோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக உரையாடினோம்.

 

'கண்டா வரச் சொல்லுங்க...' பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பாடகராக நீங்கள் முதலில் பாடிய பாடல் எது? 

 

ரொம்ப சின்ன வயசுலயே பாட ஆரம்பிச்சிட்டேன். கிராமப்புறத்தில் 'இளங்கன்று பயமறியாது'ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் என்னுடைய இளமைக்காலம் இருந்தது. அது வேற மாதிரியான சந்தோசம் நிறைந்திருந்த காலம். இருந்தாலும், என்ன பாடல்னு சரியா நினைவு இல்லை.

 

இத்தனை வருசமா பாடிக்கிட்டு இருக்கீங்க. இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. அதை எப்படிப் பார்க்குறீங்க?

 

இதுதான் உண்மையான வெற்றி. அதே நேரத்தில் என்னுடைய முதல் வெற்றியும் இதுதான். இனி தொடர்ந்து வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். 

 

கேமராவிற்கு முன் நின்ற அனுபவம் எப்படி இருந்தது?

 

இந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. இதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்களுக்கு எங்களை வைத்து ஷூட்டிங் பண்ணியிருக்காங்க. அது சிறிய அளவில் இருக்கும். இது சினிமா என்பதால் பெரிய பெரிய கேமரா வைத்து எடுத்தார்கள். இந்த நடிகர் நல்லாவே நடிக்கலைனு நாம் வீட்டில் உட்கார்ந்து ஈஸியா சொல்லுவோம். நானே அப்படிச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நடிப்பு எவ்வளவு கஷ்டம்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.

 

sakra

 

பாடலை அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷிடம் இருந்து ஏதாவது பாராட்டு வந்ததா?

 

இல்லையே. அதுதான் பெரிய வருத்தமா இருக்கு. ஊர் உலகத்துல இருக்கிற எல்லாரும் ஃபோன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க. தனுஷ் இன்னும் ஃபோன் பண்ணலையேன்னு நினைச்சு அழுகையே வந்திருச்சு. ஆனால், நிச்சயமா ஃபோன் பண்ணுவார்னு நினைக்கிறேன்.

 

நாட்டுப்புற பாடகரா உங்கள் ஆரம்பக்கால கேரியரில் மதுரை ராம்ஜி ஆடியோ முக்கியப் பங்கு வகித்துள்ளது. அதைப் பற்றி கூறுங்கள்?

 

அவர்களோட பங்குதான் அந்தக் காலத்தில் முக்கியமானதாக இருந்தது. அப்போதெல்லாம் பாடுறதுக்கு காசு ரொம்ப கம்மிதான். தொடர்ச்சியான கச்சேரிகள் இருக்கும். ஒரே நாள்ல எட்டு பாடல்வரை பதிவு செய்வார்கள். எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள். கணக்குப் பார்க்க முடியாத அளவுக்கு கேசட் போட்டாங்க. அதெல்லாம்தான் என்னை இந்த அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

 

பாடலைப் பாடும்போது உங்களுக்குள் என்ன மாதிரியான உணர்வு ஏற்பட்டது?

 

இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியிருந்த வரிகள் ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருந்தது. அவர் மனசுக்குள் எவ்வளவு போராட்டங்கள், சங்கடங்கள், வேதனைகள், வெறுப்புகள் இருந்திருந்தா, இந்த மாதிரியான வரிகள் வெளிப்படும் என்பதை என்னால் உணர முடிந்தது. அதை சரியாகப் பாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

 

சமீபத்திய சினிமாக்களில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை எப்படிப் பார்க்குறீங்க?

 

நாட்டுப்புறக் கலை என்பது மண்ணின் கலை. நாட்டுப்புற பாடல் என்றாலே ஒருகாலத்தில் அசிங்கமாக நினைப்பாங்க. இன்றைய படங்களில் அவை தலையோங்கி நிற்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”பரியேறும் பெருமாளை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்காததற்கு இதுதான் காரணம்” - கலை இயக்குநர் ராமலிங்கம் 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Art Dir Ramalingam

 

"வடசென்னை என்பது பழமையை உள்வாங்கிய இடமாக உள்ளது. இன்றைக்கு அங்கு சென்று பார்த்தாலும் பல விஷயங்கள் பழமை மாறாமல் உள்ளன. அதனால் வடசென்னை மீது எனக்கு காதல் அதிகம். சார்பட்டா பரம்பரை படத்திற்கு கலை இயக்கம் செய்தது பெரிய அனுபவமாக இருந்தது. 

 

சமூக மாற்றத்திற்கான படங்களையும் சாதிய படங்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கிறார்கள். பா.ரஞ்சித் எடுக்கும் படங்கள் சமூக மாற்றத்திற்கான படங்கள். எந்த இடத்திலும் என்னுடைய சாதி உயர்ந்த சாதி என்று ரஞ்சித் காட்டியதே இல்லை. என்னை ஏன் இப்படி பண்ணுற, நான் இப்படித்தான் இருப்பேன், என்னை என்னுடைய போக்கிலேயே விட்டுவிடு என்று படம் எடுத்தால் அதைத் தவறு என்கிறார்கள். 

 

நான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்று சொன்னால் அதைத் திமிராகச் சொல்வதாக சொல்கிறார்கள். நீ அவனை கால் மேல் கால் போடாதே என்று சொல்வதால்தான் அவன் கால் போடுவேன் என்கிறான். அவன் கால், அவன் எங்கேயும் போட்டுக்கொள்கிறான், அதில் உனக்கு என்ன பிரச்சனை வருகிறது?

 

எனவே இந்த மாதிரியான படைப்புகளை சமூக மாற்றத்திற்கான படமாகத்தான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளி மாதிரி இருப்பவர்கள்கூட ரஞ்சித் சாதிப்படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். மாரி செல்வராஜ் எடுத்த பரியேறும் பெருமாள் படத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்னிடம் சொல்வதைக்கூட தன்மையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்" என்றார். 

 

 

 

Next Story

"இது என் மனதிற்கு நெருக்கமான படம்" - கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்

Published on 09/04/2022 | Edited on 11/04/2022

 

dhanush tweet about karnan film

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஆண்டு  வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினார். தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி 'நானே வருவேன்' படப்பிடிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ், தாணு  உள்ளிட்ட படக்குழுவினர் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், "கர்ணன் பிளாக்பஸ்டர் படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இது என் மனதிற்கு நெருக்கமான படம். இது எல்லாவற்றிக்கும் காரணமான மாரி செல்வராஜ், தாணு சார், சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.