Skip to main content

ஃபகத் பாசில் படங்களுக்கு தடை? விளக்கமளித்த திரையரங்க உரிமையாளர் சங்கம்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Fahadh Faasil

 

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. பின் அரசு அளித்த தளர்வுகளுக்கு ஏற்ப திரையரங்குகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இருப்பினும் போதிய ரசிகர்கள் வரவின்மையால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவதையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் சரியான தேர்வாக கருதுகின்றனர். அந்த வகையில், ஃபகத் பாசிலின்  ’சி யூ ஸூன்’, ’இருள்’ மற்றும் ’ஜோஜி’ ஆகிய திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் வெளியாகின. இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

தொடர்ந்து ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டால் ஃபகத் பாசிலின் படங்களை எதிர்வரும் காலங்களில் திரையிட மாட்டோம் என கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக சில தினங்களாகவே தகவல்கள் பரவி வந்தன. நடிகர் திலீப், தயாரிப்பாளர் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் ஃபகத் பாசிலிடம் இது தொடர்பாக முடிவெடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பரவும் செய்திகள் அனைத்தும் புரளிகள் என்றும், ஃபகத் பாசிலிடமோ அவர் நடித்திருக்கும் படங்களாலோ எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும், எல்லாத் தரப்புடனும் நாங்கள் நல்ல நட்போடு இருக்கிறோம் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஃபகத் பாசிலிடம் விளக்கம் கேட்டதாக பரவிய தகவலை தயாரிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

 

கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அளித்துள்ள இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படம் ஈகைத் திருநாள் அன்று எவ்வித சிக்கலுமின்றி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபகத் ஃபாசில் படத்தில் இணையும் எஸ் ஜே.சூர்யா - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
sj surya fahad fazil movie tpdate

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் 62வது படத்தையும், தனுஷின் ராயன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதில் ராயன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. விக்ரமின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேஷம் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசிலுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Next Story

"அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்" - ஃபகத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

mari selvaraj about fahadh faasil

 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ஃபகத் ஃபாசில், மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் வில்லனாக நடித்திருந்த அவர் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கிய  'சூப்பர் டீலக்ஸ்', லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அடுத்து சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த ரத்னவேல் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. 

 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாரி செல்வராஜ், "வணக்கம் பகத் சார். உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன்.

 

மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்" எனத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.